மதுரையில் தேர்தல் திருவிழா


இந்திய திருநாட்டில் வரும் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் சூழலில் வாக்குச்சாவடி மையங்களையும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து, வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் வயது மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று வாக்களித்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைப்பெற்றது. மாவட்டத்தில் 13200 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் 2ஆம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகான தேர்வு  நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மா.சௌ.சங்கீதா, மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (GENERAL OBSERVER) ராஜேஸ்குமார் யாதவ், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் (General Observer) கெளரங் பாய் மக்வானா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விழிப்புணர்வு


மதுரை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 1000க்கு மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்ற பிரமாண்டமான தேர்தல் விழிப்புணர்வு ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது. பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின்படி பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ சங்கீதா அவர்கள் தலைமையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்ற பிரமாண்டமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற ஒருங்கிணைந்த முயற்சியுடன் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 

துணிப் பைகள்


சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறையை ஊக்குவிப்பதற்காகவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதற்காகவும் துணிப் பைகள் விநியோகிக்கப்பட்டது. மதுரையில் உள்ள சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட துணி பைகளில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த செய்திகளும் காட்சிப்படுத்தப் பட்டது இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா  அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் அவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.