கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்த கொண்டார். இதன் பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”9 மாத திமுக ஆட்சியில் இதுவரை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் 2 கழகங்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் குப்பை போல் வீசி விடுகிறார்கள். ஊழலுக்கும் ஊழலுக்கும் தான் தற்போது போட்டி. மக்கள் சார்பு நிலையை எடுக்க கூடாது எனவும் மய்யமாக இருக்க வேண்டும். இது மக்களுக்கு சொல்லும் அறிவுரை அல்ல எனவும் தனக்கும் தனது கட்சியினருக்குமான அறிவுரையாகவே பார்க்கிறேன். 


மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் எங்கு எல்லாம் வெற்றி பெறுகிறார்களோ, அங்கெல்லாம் நேர்மை கோட்டைக்கான அஸ்திவாரம். என்னை பார்த்து அடிக்கடி கமல்ஹாசனுக்கு ஓட்டு போட்டுறாதீங்க, மோடி ஜெயித்து விடுவார்கள் என அசட்டுதனமானவும், குழந்தை தனமாகவும் சொல்கிறார்கள். மோடி ஜெயிக்காகவா நான் இங்கு வேலைக்கு வந்தேன்? மோடி வென்றாலும் தோற்றாலும் எனக்கு கவலையில்லை. தமிழகம் ஜெயிக்க வேண்டு என்பது தான் எனது ஆசை. அவர் ஜெயிக்க பல யுக்திகளை வைத்துள்லார். அந்த யுக்திகள் பழிக்கக் கூடாது என்பது தான் எனது ஆசை. என்னை பி டீம், பி டீம் என்றார்கள். அது எடுபடாததால் இப்படி வீடு, வீடாக சொல்கிறார்கள். மோடி எப்படி கவுன்சிலராக வருவார்?




தங்கள் கட்சியினர் வென்றால் கிராம சபை கூட்டங்களை போல், நகரங்களில் வார்டு சபை, ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்படும் என உறுதிமொழி கொடுத்து தங்கள் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். நீட்டை ஒழிப்பேன் என்றவர்கள் நீட்டிற்கு வகுப்பு நடத்துவேன் என பிரச்சாரம் செய்கிறார்கள். நியாயமான தேர்தல் இதுவரை நடைபெற்றுள்ளது என நினைக்கிறீர்களா?


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேயராவது தனது நோக்கமல்ல. நான் தலைவராக மட்டுமே இருப்பேன். ஹிஜாப் விவகாரத்திற்கு பின்னர் ஒரே ஒரு கட்சி மட்டுமே இருக்கிறது. பிற கட்சிகள் அதை பிரச்னையாக பார்க்க மாட்டார்கள். ஹிஜாப் அணிவதற்கும், திருநீறு வைப்பதற்கும், கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் இந்த நாட்டில் உரிமையுண்டு. எனது நாத்திகம் கிண்டல் அடிக்கப்படக்கூடாது. ஆத்திகமும் கிண்டல் அடிக்கப்படக்கூடாது. கோவையில் பல இடங்களுக்கு தேர்தலுக்கு பின்னர் மநீம கட்சியினர் சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு தங்களின் கால்தடம் பதிந்து வருகின்றனர்” என அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் மநீமவிற்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டிற்கும் 5 ஆண்டுகளில் ஒரு மரக்கன்று வழங்கப்படும் என்ற திட்டத்தை துவக்கி வைத்து நந்தினி என்ற கர்ப்பிணிக்கு மரக்கன்று வழங்கினார்.