தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான  தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த 26 ஆம் தேதி வெளியிட்டது.  அதன்படி வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட் டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை,   துவாக்குடி, துறையூர்,  லால்குடி,  முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர்,  கூத்தைப்பார்,  மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி  முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 4 ஆம் தேதியுடன் முடிந்தது.


திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  53 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகள் என  401 வார்டுகளில் 1, 262 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,58,674 பேர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 512632 பேர்களும் , பெண்கள் 545867 பேர்களும், மூன்றாம் பாலினம் 175 பேர்களும் உள்ளனர்.




இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில்  பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தார்.


இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தது. வரிசை பிரகாரம் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டுமோ அந்த பணிகள் துவக்கப்பட்டடுள்ளது என்றார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு சில வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒரு சில இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது என்றார். இன்று மாலைக்குள் அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் வெளி மாவட்டத்தில் தங்கியிருந்து திருச்சி மாவட்டத்தில் வாக்கு இருக்கும் சுமார் 2450 தபால் ஓட்டுகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.




குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்கவேண்டும்.  மேலும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது விதிமுறைகளை பின்பற்றாமல் யாராவது  செயல்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து வெளி அரங்குகளில் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் சுவர் விளம்பரம் செய்ய எங்கும் அனுமதி இல்லை அப்படி சுவர் விளம்பரம் செய்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.