புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த புதுவை சட்டமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக-அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. இதில் தொகுதிகளை பிரிப்பது தொடர்பாக தொடக்கத்திலேயே கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது. இறுதியாக என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுவது என உடன்பாடு செய்து கொண்டு தேர்தலை சந்தித்தன. அதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.


தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமைந்தது. இந்த அரசில் அமைச்சரவையில் சரிபாதி இடத்தை கேட்டு பாஜக. பிடிவாதம் செய்தது. அதிலும் ஒரு பதவியை துணை முதலமைச்சராக தரவேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி சம்மதிக்கவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவிகளை மட்டும் வழங்கினார். இதற்கிடையே பாஜகவை சேர்ந்த 3 பேரை மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களாக நியமித்தது.




இதுதவிர 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். 12 எம்எல்ஏக்கள் பலத்துடன் செயல்பட்டு வரும் பாஜக. புதுவையில் தாங்கள்தான் முதன்மையான கட்சி என்று கூறி வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆட்சி அமைந்ததும் பதவிகள் தருவதாக கூறி 30 தொகுதிகளிலும் உள்ள பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை பாஜக வளைத்துப் போட்டது. அவர்கள் தங்களுக்கு ஏதேனும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் புதிய அரசு அமைந்து 10 மாதங்கள் ஆன நிலையில் வாரிய தலைவர் பதவிகூட நிரப்பப்படவில்லை. பலமுறை பாஜக. எம்.எல்.ஏ.க்கள் நேரில் வலியுறுத்திய போதிலும், பாஜக. மேலிடம் கூறியும் ரங்கசாமி இன்னும் ஒப்புதல் தரவில்லை.



இதுதொடர்பாக ரங்கசாமி மீது பாஜக எம்எல்ஏக்கள் கட்சி மேலிடத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் புதுவை வந்த பாஜக அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஜியிடம் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமி மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர். புதுவையில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். இதேகருத்து மேலிட பார்வையாளரான நிர்மல்குமார் சுரானாவிடமும் வலியுறுத்தப்பட்டது. தனித்து போட்டியிட்டால் தான் கட்சியை பலப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட நிர்மல்குமார் சுரானா உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து மேலிடத்தில் ஆலோசனை பெற்று முடிவு செய்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஜக. நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது: புதுவை உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று எம்எல்ஏக்களும், கட்சி நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர். அப்படி போட்டியிட்டால் தான் கட்சி வளர்ச்சி பெறும். அதே நேரத்தில் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் பாஜக, அதிமுக. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். அதேபோல் புதுச்சேரியிலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளோம் என சாமிநாதன் கூறினார்.