Karnataka Assembly Election Results 2023: கர்நாடக தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.


அமைச்சர்கள் பின்னடைவு:


முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலவி வந்தது. இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. ஆனால் காங்கிரஸ் பாஜகவை பின்னுக்கு தள்ளி பெரும்பான்மையை தாண்டி முன்னிலை பெற்று வருகிறது. இதனிடையே, பாஜகவை சேர்ந்த 8 அமைச்சர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளன்னர். 


பாஜக உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா, சிமோகா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.  கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட அசோக், ராஜாஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் குமார் உள்ளிட்டோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனிடையே, ஜேடிஎஸ் கட்சி தலைவர்  குமாரசாமி மற்றும் அவரது மகன்  நிகிலும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் 130-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  அதைதொடர்ந்து, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அனைவரையும் உடனடியாக பெங்களூருவிற்கு வருமாறு, காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.


 


Karnataka Election Results 2023 LIVE Updates



பாஜக தோல்வி:


தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் அந்த கட்சி தோல்வியை தழுவியிருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பிரதமர் மோடி, பிற மாநில முதலமைச்சர்கள், பாஜக மாநில தலைவர்கள், மூத்த தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டும் அவை எதுவும் கைக்கொடுக்காததால், கட்சி தலைமை அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 


தோல்வியை ஒப்புக்கொண்ட பொம்மை:


இதனிடையே தேர்தல் முடிவுகள் தொடர்பாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் நம்பிக்கை பொய்யாகும்படி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 


இதுதொடர்பாக பேசிய அவர், ”கர்நாடகா தேர்தலில் எங்களால் முத்திரை பதிக்க முடியவில்லை. முடிவுகள் வந்தவுடன் தோல்விக்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். தேசியக் கட்சி என்ற வகையில் தேர்தலில் செய்யப்பட்ட குறைபாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த தோல்வியை நாங்கள் எங்கள் முன்னேற்றத்திற்கானதாக எடுத்துக்கொள்கிறோம்”  என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அதேநேரம், அவர் போட்டியிட்ட ஷிக்கான் தொகுதியில் பசவராஜ் பொம்மை அபார வெற்றி பெற்றார்.