மக்களவை தேர்தலுக்கான தேதியை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கடந்த 1ம் தேதி முதல் திமுகவின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் சமர்பித்து வருகின்றனர். 


அந்தவகையில், நேற்று மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறன் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அதேபோல், வடசென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தார். 


இந்தநிலையில், தூக்குக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி மீண்டும் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது விருப்பமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, தூத்துக்குடி எம்பி கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் கீதா ஜிவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருப்ப மனுக்களை சமர்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.