அடுத்த பிரதமர் யார் என்ற தேடுதலில் தற்போது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், பாஜக சார்பில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி என்று நம்பப்படுகிறது. 


இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியிலும், கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். 2019 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, ஸ்மிடுதி இரானியிட தோல்வியடைந்தார். இந்தநிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். 


ரேபரேலியும், அமேதி தொகுதியும் காந்தி குடும்பத்தின் இரண்டு பாரம்பரிய மக்களவை தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தநிலையில், "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி" என வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிவிட்டுள்ளார். தற்போது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 






தமிழ்நாட்டில் கடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்தமுறை அதிமுக கட்சி, தேமுதிக கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சராக செல்லூர் ராஜூ, திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.