மக்களவைத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சுயேட்சைகளும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதனமாக முறைகளில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் நடனமாடிக் கொண்டும் முருகா, முருகா என்று பாடிக்கொண்டும் சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடனமாடிக் கொண்டே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர், வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது சிறுவயது முதல் ஆர்வம் இருந்த நிலையில், எம்.பியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக இன்று கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன்.




அதிரவைத்த வாக்குறுதிகள்


விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளேன். அது சார்ந்த தொழில்கள் மற்றும் பொது மக்களுக்கு சேவை செய்வதே என்னுடைய இலக்கு. விவசாயம் இல்லையென்றால், நாடே கிடையாது. சிரபுஞ்சியில் இருந்து நீரை நம்முடைய மாவட்டத்திற்கு கொண்டு வர வேண்டும். பிறந்த பெண்  குழந்தையிலிருந்து மூதாட்டி வரை 5 பவுன் தங்க நகை கொடுக்கப்படும். நிலம் இல்லாதவர்களுக்கு அரை ஏக்கர் நிலம் கொடுக்கப்படும். நிலம் உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறேன். பவுன் பத்தாயிரம் இருந்தாலும், லட்ச ரூபாய்க்கு விற்றாலும் பூமியிலிருந்து வெட்டி மக்களுக்கு கொடுப்பேன். இங்கிலாந்துகாரன் ரெண்டு டன் தங்கத்தை இந்தியாவில் இருந்து எடுத்துட்டு போயிருக்கிறான். ஆண்கள் உழைத்து வாழ வேண்டும். இளைஞர்கள் பைக்குகளை வேகமாக ஓட்டி விபத்துக்கு உள்ளாகி வருவதால் அவர்களுக்கு எதுவும் கிடையாது” எனத் தெரிவித்தார்.


மிளகாய் மாலை அணிந்து வந்த சுயேட்சை


கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை அணிந்தும், கழுத்தில் மிளகாய்களை கட்டி கொண்டும், கையில் பிச்சை பாத்திரம் ஏந்தியபடியும் தண்டோரா போட்டுக் கொண்டு வந்தார். 100 மீட்டருக்கு முன்பு அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் தேர்தல் விதிமுறையின் படி, மிளாகாய் மாலையை கழட்டி விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வருமாறு அறிவுறுத்தினர்.  அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.




ஓட்டுக்கு பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து பிச்சை கேட்க விட்டுவிடுவார்கள் என்று கூறி இதுபோன்று மிளகாய் மாலை அணிந்து கையில் பிச்சை பாத்திரத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார். இவர் இதற்கு முன்னதாக பொள்ளாச்சி தொகுதிக்கும் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதும், தேர்தலில் போட்டியிட இவர் 43 வது முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.