மதுரையில் பி.ஜே.பி சார்பாக மாநகராட்சி, பேரூராட்சியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் பி.ஜே.பி மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து மதுரைக்கான தேர்தல் அறிக்கையை மதுரை மாநகர தலைவர் டாக்டர் சரவணன் வழங்க அதனை வெளியிட்டார். மேடையில் அண்ணாமலை, தமிழ்நாட்டில்  எப்போது எல்லாம் மாற்றம் வேண்டும் என்று நினைப்பார்களோ அப்போது எல்லாம் மதுரையில் இது போன்ற கூட்டம் நடைபெறும். இது ஒரு சரித்திரக் கூட்டம். பி.ஜே.பியில் தலைவர்கள் இல்லை எல்லோருமே மக்களின் சேவகர்கள்தான் பிரதமர் மோடியும் தன்னை சேவகன் என்றே தெரிவிப்பார்.



 

எங்களின் வேட்பாளர்கள் தான் இன்றைய தினத்தின் மேன் ஆஃப் தி மேட்ஜ். மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும்  சாதாரண பொது மக்கள் தான்.  நேற்று வரை சாதாரண மக்களாக இருந்தவர்கள் இன்று வெற்றி வேட்பாளர்களாக  பி.ஜே.பி சார்பாக களமிறங்கி உள்ளனர். தி.மு.க அரசு வெஜ் , நான் வெஜ் பொங்கல் தொகுப்பு வழங்கியது. பொங்கல் தொகுப்பில்  பாம்பு, பல்லி என பல விஷப் பூச்சிக்கள் இருந்தது. பொங்கல் தொகுப்பை  சப்ளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார். ஆனால் அப்படி சப்ளை செய்ய சொன்னவர்களே நீங்கள் தான்.



 

பொங்கல் தொகுப்புக்கான கரும்பு விவசாயிகளிடம் இருந்து  25 ரூபாய்க்கு என
  மொத்தமாக 2 கோடி15 லட்சம் வாங்கி. அதனை ரேசன் கடைக்கு கரும்பு 40 ரூபாய்க்கு விற்பனை செய்தவர்கள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள். கரும்பில் மட்டும் தி.மு.க அரசு 33 கோடி கமிசன் அடித்துள்ளது.. மஞ்சள் பை ஒன்று  60 ரூபாய்க்கு வாங்கி தமிழ்நாடு அரசு கின்னஸ் சாதனை செய்து உள்ளது. பொங்கல் தொகுப்பின் விலையைவிட மஞ்சள் பை விலைதான் அதிகம்.

 

கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிதை  யாரிடம் கேள்வி கேட்பது என்றே மக்களுக்கு தெரியவில்லை. 73% பேருக்கு கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்து உள்ளது. இன்று கரூரில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின்  போதுஒரு பெண் நேரடியாகவே எப்பொழுது ரேசன் கடையில் ஆயிரம் ரூபாய் தருவீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு உதயநிதி ஸ்டாலின் மழுப்பலாக பதிலளித்து சென்றுள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக தி.மு.க தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.



 

மீண்டும் இந்த பொய்யர்களுக்கு வாக்களித்து உள்ளாட்சியில் உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ள  வேண்டும் என்றார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 12 மாநில முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். எந்த முதல்வரும் பதில்  கடிதம் எழுதவில்லை உங்கள் மானம் போகிறது. இந்தியா முழுவதும் உள்ள  37 தலைவர்களுக்கு சமூக நீதி கூட்டமைப்பு தொடர்பாக கடிதம் எழுதினார். இவரே கூட்டமைப்பு உருவாக்கி அதற்கு தலைவராக அவரே இருப்பாராம். இந்த நகைச்சுவையெல்லாம் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கும். தனது இமேஜை உயர்த்தி தேசிய அரசியலில் கால் பதிக்க வேண்டும், துணை பிரதமராக மாற வேண்டும் என ஸ்டாலின் ஆசைபடுகிறார்.

 

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தினமும் ஜிம்முக்கு சென்று யாருடன் நாடாளுமன்றத்தில் சண்டையிடலாம் என்ற நோக்கத்திலேயே வருவதால் மதுரைக்கு கிடைக்க வேண்டிய பல நல்ல திட்டங்கள் கிடைக்காமல் போகிறது. அதையும் மீறி பி.ஜே.பி அரசு நல்ல திட்டங்களை மதுரைக்கு பார்த்து பார்த்து செய்து வருகிறது. ஜல்சக்தி திட்டத்தின் மூலமாக 2023-ம் ஆண்டுக்கு முன்பாக மதுரையில் உள்ள அனைத்து வீட்டிற்கும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆனால் இங்கு இருக்கும் அரசியல் கட்சியினர் தண்ணீர் இழுப்பதற்கும் வேலை செய்வதற்கும் லஞ்சம் கேட்கின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை மாநில அரசு திட்டங்கள் போல தி.மு.க மக்களிடம் காண்பிக்கிறது. தி.மு.கவிற்கு அடுத்தவர் பிள்ளைக்கு பேர் வைத்து பழக்கமாகிவிட்டது.



 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 50 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும்பொழுது 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் மதுரை சாட்டிலைட்யாக மாறும்.

 



 

நீட் தேர்வால் தான் மதுரையைச் சேர்ந்த தங்க பேச்சி என்ற மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவிக்கு மருத்துவ படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது, அவருக்கு தேவையான உதவிகளை பி.ஜே.பி சார்பாக செய்ய அறிவுறுத்தல் வழங்கியிருந்தேன். அதேபோல்தான் கோவையைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது இதன்மலம் இருவரும் டாக்டர் ஆக மாற உள்ளனர். பி.ஜே.பி மதவாத கட்சி, இந்துக்களுக்கான கட்சியினர் கூறி வருகின்றனர் ஆனால் பி.ஜே.பி சார்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், திருநங்கைகள் வேட்பாளராக களமிறங்கி  உள்ளோம்.

 

எங்களுக்கு மதம், பாலின பாகுபாடு கிடையாது. எங்களுக்கு முருகனும் வேண்டும் அல்லாவும் வேண்டும் இயேசுவும் வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வது நாங்கள் இல்லை. தமிழகத்தில் பி.ஜே.பி ஒருபோதும் ஆட்சிக்கு வராது என ராகுல் சொன்னார் அதை கேட்டவுடன்  நான் லட்டு வாங்கி வர கட்சியினரிடம் சொன்னேன்.  ராகுல் காந்தி குஜராத் முதல்வராக மோடி வரமாட்டார் என்று கூறிய பொழுது முதல்வரானார், பிரதமர் ஆக மாட்டார் என்று கூறிய பொழுது பிரதமரானார். ராகுல் காந்தி சொன்னாலே  அவர்களுக்கு சுக்கிரன் திசை  அதிகமாகும். மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 100 பேர் மீது சின்ன நம்பிக்கை வையுங்கள். மதுரையில் திருப்பு முனை ஏற்பட்டால் என்ன வேண்டுமானலும் நடக்கு. அதற்கு சாட்சி தான் இந்த பொது கூட்டம். கோபாலபுரத்திற்கு எதிராக வாக்களியுங்கள்” என கூறினார்.