ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கோவா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் எந்த கட்சிக்கு பலம் உள்ளது என ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என பார்ப்போம்.

மக்களவை தேர்தல்:

இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  

ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 3 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது 4வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

Also Read: ABP C Voter Opinion Poll: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் வேண்டாம் என 4.2 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்

ஆந்திர பிரதேசத்தில் மலரும் தாமரை

ஆந்திர பிரதேச மாநிலத்தில் வரும் மக்களவை தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 46.7 சதவிகித வாக்குகளையும், மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள YSR காங்கிரஸ் கட்சி 39.9 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி 1.9 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதர கட்சிகள் 11.4 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.  

எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என பார்க்கும்போது, மொத்தம் உள்ள 20 தொகுதிகளில், பாஜக  5 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா கட்சி ஆகியவை சேர்ந்து 15 தொகுதிகளிலும் என மொத்தமாக 20 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணியே கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தெலங்கானாவில் ஓங்கும் கை:

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி உள்ளது. அங்கு காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 41.5 சதவிகித வாக்குகளையும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 25.7 சதவிகித வாக்குகளையும், சந்திரசேகர் தலைமையிலா TRS ( BRS என மாற்றப்பட்டுள்ளது ) கட்சி 26. 7 சதவிகித வாக்குகளையும் AIMIM கட்சி 2.5 சதவிகித வாக்குகளையும் இதர கட்சிகள் 3.5 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் 17 மக்களவை தொகுதிகள் உள்ளன. மற்றும் காங்கிரஸ் 10 தொகுதிகளையும், பாஜக 5 தொகுதிகளையும் TRS மற்றும் AIMIM தலா ஒரு தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம்மில் மலரும் தாமரை

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி 51.8 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 35.5 சதவிகித வாக்குகளையும், AIUDF கூட்டணி 10.5 சதவிகித வாக்குகளையும் இதர கட்சிகள் 2.3 சதவிகித வாக்குகளையும் பெறும் என வாக்காளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில்  கணிக்கப்பட்டுள்ளது.  

அஸ்ஸாம் மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. பாஜக கட்சி 9 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சியான AGP மற்றும் UCCL  ஆகியவை 3 தொகுதிகளும் என மொத்தமாக NDA கூட்டணி 12 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றியை பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் கடும் போட்டி:

கோவா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி 46 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 44.9 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 9.1 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

கோவா மாநிலத்தில் 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்து கணிப்பு முறை:

சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம்  நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

கருத்து கணிப்பின் எண்ணிக்கை அளவானது 3% முதல் 5% மாறுபாடு இருக்கலாம் எனவும், 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.