புளுகு மூட்டையின்‌ மறு வடிவமே திமுகவின் தேர்தல் அறிக்கை என்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது நடக்கும் எனவும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்‌ வெளியிட்டுள்ள அறிக்கை:

“பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும்‌ ஓவிய ஆசிரியர்கள்‌, இசை ஆசிரியர்கள்‌, உடற்பயிற்சி ஆசிரியகள்‌ ஆகியோரை பணி நிரந்தரம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌” என்ற வாக்குறுதி தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ இடம்‌ பெற்றுள்ளது. ஆனால்‌, தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள்‌ கடந்துவிட்ட நிலையில்‌ இந்த வாக்குறுதி குறித்து முதலமைச்சர்‌‌ மவுனம்‌ சாதிப்பது “பொய்யிலே  பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்‌ பெருமானே” என்ற புரட்சித்‌ தலைவரின்‌ பாடல்‌ வரிகளைத்‌தான்‌ நினைவுபடுத்துகிறது. கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. அரசின்‌ நடவடிக்கைகளைப்‌ பார்க்கும்‌ போது தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையே புளுகு மூட்டையின்‌ மறு வடிவமாக காட்சி அளிக்கிறது.

Continues below advertisement

தமிழ்நாட்டிலுள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ பல ஆண்டுகளாக இளைஞர்களின்‌ வாழ்க்கைக்கு இன்றியமையாததாக விளங்கும்‌ உடற்கல்வி, ஓவியம்‌, தையல்‌, கட்டடக்‌ கலை, தோட்டக்‌ கலை, இசை, வாழ்வியல்‌ திறன்‌ போன்றவற்றை போதிக்கும்‌ உன்னதமான பணியை 12 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள்‌ மேற்கொண்டு வருகின்றனர்‌. இதுபோன்ற சிறப்புப்‌ பாடங்கள் மாணவ, மாணவியர்‌ தங்களுடைய தனித்‌ திறமையை தங்களுக்கு விருப்பமான பாடங்களில்‌ வளர்த்துக்‌ கொள்ள வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல்‌, வேலைவாய்ப்பினைப்‌ ஏற்படுத்திக்‌ கொடுப்பதற்கும்‌ சுய வேலைவாய்ப்பினை உருவாக்கிக்‌ கொள்வதற்கும்‌ பெரிதும்‌ உதவும்‌.

எதிர்காலமே கேள்விக்குறி

இப்படிப்பட்ட முக்கியத்துவம்‌ வாய்ந்த பாடங்களை பயிற்றுவிக்கும்‌ பகுதி நேர ஆசிரியர்களின்‌ நிலைமை பரிதாபகரமாக உள்ளது. நிரந்தரப்‌ பணியில்‌ உள்ள ஆசிரியர்கள்‌ மேற்கொள்கின்ற அதே பணியை பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகள்‌ மேற்கொண்டு வந்தாலும்‌, அவர்களுக்கு வழங்கப்படும்‌ சம்பளம்‌ வெறும்‌ பத்தாயிரம்‌ ரூபாய்தான்‌. தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள்‌ தெரிவிக்கின்றனர்‌.

'பகுதி நேர ஆசிரியர்களை ஆசிரியர்களை பணி நிரந்தரம்‌ செய்வோம்‌' என்று தேர்தல்‌ சமயத்தில்‌ கூறி அவர்களின்‌ வாக்குகளைப்‌ பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள்‌ கடந்துள்ள நிலையில்‌ அது குறித்து மவுனம்‌ சாதிப்பது என்பது நம்பி வாக்களித்த பகுதி நேர ஆசிரியர்களை வஞ்சிக்கும்‌ செயல்‌. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

அரசுப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ பகுதி நேர ஆசிரியர்கள்‌ அனைவருமே வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழ்‌ வாழ்கின்றவர்கள்‌. தற்போது மின்‌ கட்டணம்‌ இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்‌, சொத்து வரி காரணமாக வீட்டு வாடகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில்‌, பால்‌, தயிர்‌, வெண்ணெய்‌, நெய்‌ ஆகியவற்றின்‌ விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில்‌, அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ விலை அதிகரித்துக்‌ கொண்டே இருக்கின்ற நிலையில்‌, அரசு அளிக்கும்‌ பத்தாயிரம்‌ ரூபாய்‌ சம்பளத்தை வைத்துக்‌ கொண்டு தங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியாத அவல நிலைக்கு அவர்கள்‌ தள்ளப்பட்டு  இருக்கிறார்கள்‌. கடன்‌ சுமையில்‌ தவித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. 

நெருக்கடி நிலையில்‌ அல்லல்

இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில்‌ அல்லல்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ ஆசிரியர்களின்‌ பணியை தேர்தல்‌ வாக்குறுதிக்கு ஏற்ப நிரந்தரம்‌ செய்வது குறித்தோ, அவர்களுடைய சம்பளத்தை உயர்த்துவது குறித்தோ, அவர்களுக்கு இதர சலுகைகள்‌ அளிப்பது குறித்தோ அரசு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

தேர்தல்‌ நேரத்தில்‌ தி.மு.க. அளித்த வாக்குறுதிக்கு செவி சாய்த்து வாக்களித்ததாகவும்‌, ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள்‌ ஆகியும்‌ தங்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்க தி.மு.க. அரசு மறுத்து வருவதாகவும்‌ பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்‌ வேதனையுடன்‌ தெரிவித்து வருகின்றனர்‌. தங்களுடைய பணி நிரந்தக்‌ கோரிக்கை உட்பட அனைத்துக்‌ கோரிக்கைகளும்‌ நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே பகுதி நேர ஆசிரியர்களின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தி.மு.க.வின்‌ தேர்தல்‌ வாக்குறுதிக்கு ஏற்ப, பகுதி நேர ஆசிரியர்களின்‌ பணியை நிரந்தரம்‌ செய்யவும்‌, அவர்களின்‌ அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்’’‌.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.