பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகம் மற்றும் 
கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து, யுஜிசி செயலர் மணீஷ் ஜோஷி அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி உள்ளதாவது: 


நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான தலைமை நிறுவனமான மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்  (Central Vigilance Commission - CVC) ஆண்டுதோறும் ஊழல் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பிற துறைகளும் இதைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 


ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள்: தேசத்துக்காக அர்ப்பணியுங்கள்


அதன்படி 2023ஆம் ஆண்டில் 'ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள்: தேசத்துக்காக அர்ப்பணியுங்கள்' (Say no to corruption and commit to the Nation) என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இது வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


ஊழல் தொடர்பான நடைமுறைகளையும், அவற்றை எப்படி முறையிட வேண்டும் என்பது குறித்தும் மக்களிடம் கற்பித்தலை உருவாக்க இந்த விழிப்புணர்வு வாரம் உபயோகமாக இருக்கும். அந்த வகையில், உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு 
வாரத்தை முன்னிட்டு மாணவர்களை ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.


செயல்பாடுகள் மூலம் விழிப்புணர்வு


அதேபோல ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், விநாடி-வினா போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ் அப் செயலி போன்றவற்றின் வாயிலாகவும் விழிப்புணர்வு செய்திகளை சக 
மாணவர்களிடையே பரப்பவும் அறிவுறுத்தலாம். குறிப்பாக PDPI, Capacity Building, Technological Initiatives, Up-gradation of Guidelines/ Circular Manuals, Disposal of complaints  உள்ளிட்டவை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். 


இந்த செயல்பாடுகளின் விவரத்தை அறிக்கையாக்கி மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். இந்தத் தகவல்கள் யுஜிசியின் பல்கலைக்கழக செயல்பாட்டு கண்காணிப்பு இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். 


இவ்வாறு யுஜிசி செயலர் தெரிவித்துள்ளார்.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.ugc.gov.in/pdfnews/5312970_Vigilance-Awareness-Week-2023.pdf