திருச்சி: திருச்சி கல்வி மாவட்டம் மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. எதற்காக தெரியுங்களா? தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டில் 1ம் வகுப்பில் அதிக அளவு மாணவா் சோ்க்கையில்தான் திருச்சி இந்த சாதனையை செய்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், புத்தகப்பை என பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்ல... அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மழலையா் வகுப்புகள் குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய் செலுத்தி மழலையா் வகுப்புகளில் சோ்க்க முடியாத பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் செயல்படும் மழலையா் பள்ளிகளில் சோ்த்து விடுகின்றனர்.
இதேபோல, கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டமும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்க முக்கியக் காரணமாக உள்ளது என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் புதிய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி வரை 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனர். மழலையா் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 4 லட்சத்து 364 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனர்.
இதில், மழலையா் வகுப்பில் 32,807 மாணவா்கள், ஒன்றாம் வகுப்பு தமிழ் வழியில் 2,11,563 மாணவா்கள், ஆங்கில வழியில் 63,896 மாணவா்கள், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 92,098 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரிவில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 459 மாணவா்கள் சோ்க்கை நடந்துள்ளது. தமிழகத்தில் 120 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், மாணவா் சோ்க்கையில் 8,571 மாணவா்களுடன் தென்காசி கல்வி மாவட்டம் முதலிடமும், 8 ஆயிரம் மாணவா்களுடன் திண்டுக்கல் கல்வி மாவட்டம் இரண்டாமிடமும், 7,711 மாணவா்களுடன் திருச்சி கல்வி மாவட்டம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. அதற்கடுத்து 7,554 மாணவா்களுடன் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் நான்காமிடத்தையும், 7,386 மாணவா்களுடன் திருவண்ணாமலை கல்வி மாவட்டம் ஐந்தாமிடத்தையும் பிடித்துள்ளது.
இதேபோல குறைந்த மாணவா் சோ்க்கையில் 1,022 மாணவா்களுடன் நீலகிரி கல்வி மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. 2,207 மாணவா்களுடன் தேனி கல்வி மாவட்டம், 2,480 மாணவா்களுடன் ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம், 2,594 மாணவா்களுடன் தாராபுரம் கல்வி மாவட்டம், 2,397 மாணவா்களுடன் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் மாணவா் சோ்க்கையும் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு இலவசமாக மாணவா் சோ்க்கை வழங்கப்பட்டு வந்தது. இதற்கான நிதி அரசு சாா்பில் தனியாா் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு நிதியை நிறுத்தியதால், தமிழகத்திலும் ஆா்டிஇ திட்டத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கணிசமாக உயா்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
மேலும், ஆா்டிஇ திட்டத்தில் தனியாா் பள்ளிகளில் சோ்க்கையை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, அதற்காக செலவிடப்படும் தொகையை, அரசுப் பள்ளியின் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தினால், அரசுப் பள்ளிகளின் தரமும் உயரும், மாணவா்களின் சோ்க்கையும் அதிகரிக்கும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.