டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளைப் படித்தவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணிகளுக்கான அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி, தேர்வுகள் மூலம் அரசு காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களைத் தேர்வு செய்து கொடுக்கிறது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணிகளுக்கான (ஐடிஐ, டிப்ளமோ லெவல்) அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு, டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளைப் படித்தவர்கள் இன்று (ஆக. 13ஆம் தேதி) முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தொழில்நுட்ப உதவியாளர், சர்வேயர் மற்றும் உதவியாளர் வரைவாளர், டெக்னீஷியன், உதவி ஆய்வாளர், விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அதிகாரி, ஜூனியர் வரைவு அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி திட்டமிடுதல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இதன்மூலம் விண்ணப்பிக்கலாம். ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். செப்.15 முதல் 17 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

Continues below advertisement

விண்ணப்பக் கட்டணம்

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும் தகுதியான நபர்களுக்கு, விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முறை

முதல் தாளாக தமிழ் மொழி தகுதித் தேர்வு (Tamil Eligibility Test), பொது அறிவு (General Studies) மற்றும் மனத்திறன் தேர்வு (Aptitude and Mental Ability Test ) ஆகியவை நடைபெற உள்ளன. நவம்பர் 9ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

பதவிகளின் பெயர்கள், அவற்றுக்கான தகுதி, காலி இடங்கள், வயது வரம்பு, விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://tnpsc.gov.in/Document/english/CTSE_DIP_Eng_13.08.2024_.pdf என்ற இணைப்பில் காணலாம். இதிலேயே பாடத் திட்டமும் விண்ணப்பப் படிவமும் கொடுக்கப்பட்டு உள்ளது.