டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அம்பேத்கர் கல்வி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணையில் உத்தேசமாக  குரூப் 2 மற்றும் 2ஏ-விற்கான தேர்வின் அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதம் வெளிவர இருக்கிறது. அரசின் அறிவிப்பில் தோராயமான காலி பணியிடங்கள் 5,831 என போட்டித் தேர்வுக்கான அட்டவணையில் அறிவித்துள்ளது. 


அடுத்தடுத்து அரசின் அறிவிப்பில் இவ்வாண்டு மட்டுமே 32 விதமான போட்டித் தேர்வுகள் நடத்த உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. 


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வின் பாடத்திட்டங்களை முழுமையாக ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம். தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளது. முதல்நிலை மற்றும் முதன்மைத்தேர்வு என இரண்டு தேர்வுகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் வார இறுதியில் மாதிரித் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறும். 




குரூப் 2 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்ப ரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள் கலந்துரையாடல் வடிவத்தில் இருக்கும். இவ்வகுப்புகளை, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகிறது. தலித்துகள் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


டிசம்பர் 25 முதல் பயிற்சி


சென்னையில் பயிற்சி வகுப்புகள் வரும் 25.12.2021 சனிக்கிழமை தொடங்குகிறது. வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை மாதிரித் தேர்வுடன் கூடிய கலந்துரையாடல் வடிவத்தில் பயிற்சிகள் நடைபெறும். கலந்துரையாடலின் சிறப்பம்சமே எல்லா மாணவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்று, தங்களது திறமையை மேம்படுத்துவதுடன் தேர்வில் அதிகபட்ச பலத்தோடு வெற்றி பெறுவதுதான்.


பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் கொரானா பெருந்தொற்றிற்கான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தையும் வகுப்பிற்கு வரும்போது கொண்டுவர வேண்டும். தவறும் மாணவர்கள் வகுப்பினுள் நுழைய அனுமதியில்லை. உருமாறிய கொரானா மற்றும் ஒமிக்ரான் பெருந்தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மாணவர்கள், அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். 


அனுமதிக்கப்பட்ட சமூக இடைவெளியுடன், கால இடைவெளியில் சானிடைசரை முறையாக பயன்படுத்த வேண்டும். முகக்கவசம் அவசியம். தனிநபர் இடைவெளி போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுதல் அவசியம்.


இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். கொரானா நோய்த்தொற்றை முன்னிட்டு பாதி  அளவே இருக்கைகள் இருப்பதால் முன்பதிவு  அவசியம். 


பயிற்சி நடைபெறும் இடம்:


சிஐடியு அலுவலகம். 
நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம், 
ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.


பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
அமலா. 63698 74318.
ஜனனி. 97906 10961.
நாகமணி. 85085 47466.
வாசுதேவன். 9444641712.