டிஎன்பிஎஸ்சி 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம். 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வை 1,59,887 பேர் எழுதினர்.


90 காலிப்பணிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு


தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், குரூப் 1 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 13 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவர்.


இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள 16 துணை ஆட்சியர் இடங்கள், 23 துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பணியிடங்கள், 14  வணிகவரித்துறை உதவி ஆணையர் பணியிடங்கள், 21 கூட்டுறவு துறை துணை பதிவாளர் பணியிடங்கள், 14 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பணியிடங்கள், ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பணியிடம் மற்றும் ஒரு மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பணியிடம் என மொத்த 90 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


1.59 லட்சம் பேர் எழுதிய தேர்வு


குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியான நிலையில், தேர்வை எழுத 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில்  குரூப் 1 முதல்நிலை தேர்வை 1,59,887 பேர் எழுதினர்.


50 நாட்களிலேயே தேர்வு முடிவுகள்


இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிந்த 50 நாட்களிலேயே இன்று (செப். 2) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/04_2024_GR_I_PRLM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம். 


இந்தப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவெண்கள் அனைத்தும் முதன்மைத் தேர்வை எழுதத் தகுதி ஆனவை ஆகும்.


முதன்மைத் தேர்வு எப்போது?


இந்த நிலையில் குரூப் 1 முதன்மைத் தேர்வு, டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெற உள்ளது. தேர்வை எழுத உள்ளவர்கள், கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். 


தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.