குரூப் 1, 2 உள்ளிட்ட தேர்வுகளின் முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதவிர்த்து, குரூப் 3 உள்ளிட்ட 11 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 


தேர்வர்கள் கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, டிஎன்பிஎஸ்சியின் முழு அட்டவணையைக் காணலாம்


டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாட்டு அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. புதிதாக உருவாகும் இடங்கள், ஓய்வு பெறுவோரால் ஏற்படும் காலியிடங்கள் ஆகியவை ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் தேதி அட்டவணையையும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச மாத அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 18 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. 


டிசம்பரில் குரூப் 2 தேர்வு முடிவுகள்


முன்னதாகவே தெரிவித்து இருந்தபடி, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் குரூப் 2 தேர்வின் முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த  குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில்  55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளன.


குரூப் 1 தேர்வு முடிவு தேதி அறிவிப்பு


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர். 


5 மாதங்களை கடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர். தொடர்ந்து, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியாகின. தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 10 முதல் 13ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 


பிற தேர்வுகள்


10 பணியிடங்களுக்கான குரூப் 6 தேர்வு (தமிழ்நாடு வனத்துறை துணை வனப் பயிற்சியாளர் பணி) கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகி உள்ளன. 


33 பணியிடங்களைக் கொண்ட குரூப் -III A பணிக்கான தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், தற்போது ஆகஸ்ட் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைகள் தேர்வு


217 பணியிடங்களுக்காக ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைகள் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், தற்போது ஆகஸ்ட் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகளுக்கான தேர்வு மே மாதம் நடைபெற்றது. 1083 பணி இடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


கிராமப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாலை ஆய்வாளர் (Road Inspector) பணிக்கான தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 825 பணி இடங்களுக்கான தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளன. 


முழு அட்டவணையைக் காண https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf