தமிழகத்தில் ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப் படிப்பில் (L.L.B) 2024-2025 ஆம் கல்வியாண்டில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ், பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ், பி.காம். எல்எல்பி ஹானர்ஸ் மற்றும் பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்பி ஹானர்ஸ் படிப்புகளும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன். இதற்கு முறையே குறைந்தபட்சம் 60 சதவீதமும் 45 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் முறையே குறைந்தபட்சம் 55 சதவீதமும் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.  


விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?


அதேபோல சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 ஆகும்.


பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 ஆகும். என்ஆர்ஐ மாணவர்கள் 200 டாலர்களைச் செலுத்த வேண்டும்.


மூன்றாண்டு எல்எல்பி படிப்பு


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Dr. Ambedkar Law University) கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சீர்மிகு சட்டப்பள்ளி உள்ளிட்ட அரசு சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் ஆகியவற்றில் மூன்றாண்டு எல்எல்பி (LLB) படிப்பிற்கு 2,530 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர https://www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர்.


இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசித் தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


என்ன காரணம்?


பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் முடிந்து இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மாணவர்களின் நலனைக் கருதி அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளர் கெளரி ரமேஷ் தெரிவித்துள்ளார். 


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://tndalu.ac.in/pdf/3%20Year%20LL.B%20Degree%20Course%20Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முழு அறிவிக்கையைக் காணலாம்.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndalu.ac.in/ 


தொலைபேசி எண் : 044- 24641919/ 24957414