10 மற்றும் 11-ஆம் வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் அனைவரும் ’ஆல் பாஸ்’ செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 


முன்னதாகத் தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் வெளியானது. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் குழப்பத்தை தவிர்க்க 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தசம (decimal System) அடிப்படையில் வெளியிடப்பட்டது.   




தேர்வு மதிப்பெண் பட்டியலை வெளியட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், " இந்தாண்டு வாரியத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் யாரும் பெறவில்லை. தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கும், மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்களுக்கு திருப்தியடையாத மாணவர்களுக்கும் தக்க சமயத்தில் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.               


மாணவர்கள், தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.


தமிழ்நாட்டில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்,  12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், ப்ளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது (50:20:30). 12-ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated to 30 Marks) முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாற நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தது.    மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே, 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று  உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் 30:30:40 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதாவது, 10 மற்றும் 11 வகுப்பு மதிப்பெண்களுக்கு 30 சதவிகிதம் மதிப்பும், 12 வகுப்பு பிற தேர்வுகளில் எடுத்த மதிபெண்களுக்கு 40 சதவிகிதம் மதிப்பு வழங்கப்பட்டது.


மதிப்பெண் பட்டியலை கடந்த 22ஆம் தேதி http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்திருந்தது.