சேலம் மாவட்டத்தில் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 523 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20,532 மாணவர்கள், 20,177 மாணவிகள் என மொத்தம் 40,709 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 18,460 பேரும், மாணவிகள் 19,060 பேரும் என மொத்தம் 37,520 பேர் தேர்வாகியுள்ளனர். நடப்பாண்டு சேலம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 92.17 ஆக உள்ளது. இதில் மாணவர்கள் 89.91 சதவீதமும், மாணவிகள் 94.46 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் 130 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 296 பள்ளிகளைச் சேர்ந்த 11,378 மாணவர்கள், 12,420 மாணவிகள் என மொத்தம் 23,798 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 9,863 பேர் மாணவிகள் 11,473 பேர் என, மொத்தம் 21,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 86.68 சதவீதமும், மாணவிகள் 92.38 சதவீதமும் என, சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 89.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 45 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்வு விகிதம், கடந்த ஆண்டு 89.64 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு 89.65 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 91.75% ஆக இருந்த மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் நடப்பாண்டு 92.17% ஆக உள்ளது.

மத்திய சிறை சிறைவாசிகள் 100% தேர்ச்சி:

சேலம் மத்திய சிறையில் 25 சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 25 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிறைவாசிகளில் கோபி 412 மதிப்பெண்கள் பெற்று சேலம் மத்திய சிறையில் முதலிடமும், கோவிந்தராசு 372 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், முத்து 366 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.