தஞ்சாவூர்: மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் அறிவுரை கூறினார். 


முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு


தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கின. வகுப்புகளுக்கு வந்த மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், துறை பேராசிரியர், டாக்டர்கள், மூத்த மாணவர்கள் என அனைவரும் வரவேற்றனர். 
தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளின் அறிமுக நிகழ்ச்சி வெண்துளிர் 24 என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம் தலைமைவகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தலைசிறந்த பேராசியர்கள் பணியாற்றுகின்றனர்


மாணவ, மாணவிகளை வரவேற்று மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் பேசியதாவது: முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்கள். தஞ்சை மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக திகழ்கிறது. தலைசிறந்த பேராசிரியர்கள், டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். 


மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்


தங்களது பிள்ளைகளை விடுதியில் சேர்த்து விட்டோம். இனி பட்டமளிப்பு விழாவில் பார்த்துக் கொள்ளலாம் என பெற்றோர்கள் ஒருபோதும் நினைக்கக் கூடாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது பிள்ளைகளை பார்த்து பல விஷயங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தங்களது பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள், விடுதி வசதி எப்படி உள்ளது என எங்களிடம் கேளுங்கள் . மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம். நன்றாக படிக்கிறார்கள் என எண்ணி விலை உயர்ந்த செல்போன், பைக் போன்றவற்றை தயவு செய்து வாங்கி கொடுத்து விடாதீர்கள். 


டாக்டர் பணிக்கு ஒருபோதும் ஓய்வு கிடையாது


டாக்டர் பணிக்கு ஒருபோதும் ஓய்வு கிடையாது. எனவே நன்றாக படித்து தலை சிறந்த டாக்டர்களாக ஆக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 


தொடர்ந்து மாணவ- மாணவிகள் மருத்துவக் கோட் அணிந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு மாணவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதில் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் சுமதி, சுதா, தமிழ்மணி, ஜெகதீசன், ஜோஸ்வின் பிரியா, சாந்தி, வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.