சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெட் ஆசிரியர்கள் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முன்னதாக இவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனது இல்லத்துக்கு நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். 


நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் 3 விதமான ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 


டெட் ஆசிரியர்கள் சங்கம் கூறுவது என்ன?


’2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும்’ என்று கோரி, டெட் ஆசிரியர்கள் சங்கம் போராடி வருகிறது. 


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் கூறுவது என்ன?


இதற்கிடையே சுமார் 20 ஆயிரம் பேரைக் கொண்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவ்வாறு மொத்தமாக 175-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் கூறுவது என்ன?


முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கமும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கமும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 




3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி


முன்னதாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் நடத்திய இரண்டு கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 5ஆவது நாளான இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டெட்  ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு, ராஜா அண்ணாமலைபுரம், பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது. எனினும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.  


அதேபோல, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர்,  முதல்வர் முடிவை அறிவிக்கும் வரை, போராட்டக் களத்தில் தொடர்வோம் என்று தெரிவித்துள்ளனர்.


எனினும் இன்னொரு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை என்னவானது என்னும் விவரம் இதுவரை வெளியாகவில்லை.