மீன்வளத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மீனவர்களின் பராம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களின் நலன் பேணுதல்,  மீன்வளர்ப்பின் மூலம் ஊரகப்பகுதியில் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்குதல் போன்ற பல்வேறு கொள்கைகளின் படி தமிழகத்தில் மீன்வளத்துறை செயல்பட்டுவருகிறது. இத்துறைக்கு அமைச்சர் உட்பட, நிர்வகிக்க மீன்வளத்துறை கூடுதல் ஆணையர், கண்காணிப்பாளர், சட்ட அமலாக்கத்துறை போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவை அனைத்திற்கும்,  இத்துறை சம்பந்தப்பட்டப் படிப்பினை மேற்கொண்டவர்கள் தகுதியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தான் தமிழ்நாடு அடிப்படை பணிகளுக்கு கீழ் தற்பொழுது 8 வயது படித்தவர்களுக்கும் மீன்வளத்துறையின் கீழ் அலுவலக உதவியாளராக பணியாற்றலாம் என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அதோடு மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18 வயது முதல் 32 வயது இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதர வகுப்பினருக்கு 18 முதல் 30 வயது இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதோடு முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றோருக்கு ஏற்கனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் வேலைவாய்ப்பு  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை www.tnfishers.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் “ மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம்,ஒருங்கிணைந்த கால்நடைப்பராமரிப்பு,மீன்வளம் மற்றும் மீன்வர்நலத்துறை அலுவலக வளாகம்நந்தனம், சென்னை- 35“, என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும்  விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும் எனவும், ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு மீன்வளத்துறை தனது வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  மேலும் விபரங்களை https://drive.google.com/file/d/1x-RDwR2QXjA44RjURxVbL2ofHP0o7Mox/view என்ற பக்கத்தில் அறிந்து கொண்டு பயன்பெறலாம். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.