பிளஸ் 2 துணைத் தேர்வை எழுத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்களித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. துணைத் தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நமது மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல ஆகஸ்டு 2021 திங்களில் நடைபெறவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17(1)-ன் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.


 






இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள். தாங்கள் விரும்பும்பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.