12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ள நிலையில், இதில் மாணவ, மாணவிகளில் யார் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை பற்றிய முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம். 


12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை  7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் எழுதினர். அதாவது சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இதையடுத்து, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போதும் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்தநிலையில், இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியது. 


வெளியான தேர்வு முடிவுகள்:


அதன்படி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (இன்று) மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகியது. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ,  www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்ச்சி விகிதம் எவ்வளவு? 


12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், வழக்கம்போல் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் உள்ளனர்.  மாணவியர்கள் 96.44 சதவீதம் பேரும், மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 7.6 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,93,890 மாணவிகளும், 3,25,305 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


ஆண்கள் பள்ளிகளை விட இருபாலர் பள்ளிகளில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் 5.8 % அதிகம்


ஆண்கள் பள்ளி தேர்ச்சி விகிதம் – 88.98
இருபாலர் பள்ளி தேர்ச்சி விகிதம – 94.78


திருவண்ணாமலை மாவட்டம்: 


தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11,037, தேர்ச்சி பெற்ற மாணவிகள் 12,984, மொத்தம் 24021 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீதம் 86.74, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 93.90 ஆகும். 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதம் தேர்ச்சி:


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11455 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.


ஆண்கள்-5680
பெண்கள்-6733


 இதில் 11455 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . தேர்ச்சி சதவீதம் 92.28 .


மயிலாடுதுறை மாவட்டத்தில் 92.38 சதவீதம் தேர்ச்சி: 


மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.38 சதவீதமாக உள்ளது. 


இதையடுத்து, வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மாணவர்கள் - 90.28%
மாணவிகள் - 94.06%


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.23 % தேர்ச்சி சதவீதம் அதிகம் ஆகும்.