மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியாகியுள்ளது. இதில் 90.93 %  மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 3,260 தேர்வு மையங்களில் எழுதினர்.


தேர்வு நடந்தது எப்போது?


11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. மார்ச் 16ஆம் தேதி ஆங்கிலப் பாடம், மார்ச் 20ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.


மார்ச் 24ஆம் தேதி அன்று உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கும் மார்ச் 28ஆம் தேதி அன்று வேதியியல், கணக்குப் பதிவியல், மார்ச் 30ஆம் தேதி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. கடைசியாக ஏப்ரல் 05ஆம் தேதி அன்று கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது.


தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?


மாணவர்கள் 


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இதற்குத் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர்கள் உள்ளிட வேண்டியது அவசியமாகும்.


வேறு என்னென்ன வழிகள்?


மேலும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களில் (National Informatics Centres)  தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.


இவை அனைத்தையும் தவிர்த்து, அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


3,61,454 மாணவர்களும், 4,15,389 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம்  7,76,844  பேர் தேர்வு எழுதினர். இதில் 7,06,413  மாணவ- மாணவிகள், அதாவது 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.