கர்நாடக மாநிலத்தின் 5, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து, உத்தரவிட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


நீதிபதிகள் பெலா திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, எந்தக் காரணத்துக்காகவும் தேர்வு முடிவுகள் பயன்படுத்தக் கூடாது என்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல, கர்நாடகாவின் செயல்பாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதுடன் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று கவலை தெரிவித்தனர்.


அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கொள்கைகளுக்கு முரணாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முரணாக இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அடுத்த உத்தரவு வரும் வரை, தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பின்னணி என்ன?


முன்னதாக, 5, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை அரசு நடத்தலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 11 முதல் 45 ஆயிரம் பள்ளிகளில் 28 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதத் தயாராகினர். 


திடீரெனப் பொதுத்தேர்வு வைத்தால் என்ன செய்வார்கள்?


மார்ச் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சுயநிதி தனியார் பள்ளிகள் மேலாண்மை சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவில், ’’2023 மார்ச் மாதத்தில் சில குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டனர். 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீரெனப் பொதுத்தேர்வு வைத்தால் என்ன செய்வார்கள்? பெற்றோர்களும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்’’ என்று சுயநிதி தனியார் பள்ளிகள் மேலாண்மை சங்கம் தெரிவித்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பொதுத் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்தது.


இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தின் 5, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து, உத்தரவிட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 2A Rank List: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி பார்க்கலாம்?