நாடு முழுவதும் நாளை (ஜூன் 6ஆம் தேதி) வெள்ளிக் கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் தேசிய பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்று பரவி வரும் தகவல் வதந்தியே என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்து உள்ளதாவது:
"பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (06.06.2025) தேசிய பொது விடுமுறையை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது" என்ற இணையதள செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இது முற்றிலும் வதந்தி.
பரவி வரும் இணையதள செய்தி செயற்கை நுண்ணறிவு (Al) மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் வெள்ளிக்கிழமை (06.06.2025) அன்று பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
வதந்தியை நம்பாதீர்.’’
இவ்வாறு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்து உள்ளது.
தொழில்நுட்பம் நாள்தோறும் வளர்ந்து வரும் காலகட்டத்தில், போலிச் செய்திகளும் அவதூறு தகவல்களும் வன்மங்களும் புற்றீசலாய்ப் பரவி வருகின்றன. இந்த நிலையில், ஃபேக்ட் செக் எனப்படும் தகவல் சரிபார்ப்பகம் மூலம் சரியான தகவல்கள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.