பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தத்தைச் சென்னையில் சந்தித்துப் பேசினார். சமக்ர சிக்‌ஷா அபியான் என்னும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்துக்கான முதல் தவணை நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்காத நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைய சம்மதம் தெரிவித்து சில மாதங்களுக்கு முன்பு, தமிழக தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தார். எனினும் அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக மும்மொழிக் கொள்கை, 3, , 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 8ஆம் வகுப்பு முதல் தொழில் கல்வி பாடம் ஆகியவற்றுக்கு விலக்கு தேவை என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.


இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கான முதல் தவணை நிதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 


பின்னணி என்ன?


இதற்கிடையே கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து இருந்தார். மேலும் பேசிய அவர், ’’இதுகுறித்து முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். உங்களின் (மத்திய அரசு) மறைமுக நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.  அதைத் தெரிந்துகொள்ள, எங்கள் குழுவின் பரிந்துரை அவசியம்.


குழு ஒப்புக்கொள்ளவில்லை என்ற சூழலில், நாங்களும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகே மத்தியக் கல்வி அமைச்சரைச் சந்தித்தோம். எஸ்எஸ்ஏ திட்டத்துக்கான நிதியைத்தான் கேட்கிறோம். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர்க்கச் சொல்லவில்லை’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.


சந்திப்பில் நடந்தது என்ன?


இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தத்தைச் சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர்வது பற்றி எழுதிய கடிதம் குறித்தும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்துக்கான நிதியைப் பெறுவது பற்றியும் கலந்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


அதேபோல எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் தலைமைச் செயலாளருடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.