பொறியியல் 3ஆம் கட்டக் கலந்தாய்வு முடிந்த நிலையில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.


முதல்கட்ட கலந்தாய்வு செப்.10 முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது. கட் - ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 25 முதல் 27ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும் நடைபெற்றது. நான்காம் கட்டக் கலந்தாய்வு இன்று (அக்.29) தொடங்கி உள்ளது. இந்தக் கலந்தாய்வு அக்.31 வரை நடைபெற உள்ளது.


கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற புதிய முறையும் நடப்பாண்டு முதல் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் பொதுசெலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும்.


3ஆவது கட்டக் கலந்தாய்வு முடிவில், 24,727 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 3,293 பேருக்கு அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் இடம் உறுதி செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. 


இன்று தொடங்கியுள்ள 4ஆவது கட்டக் கலந்தாய்வில் 61,771 தகுதி வாய்ந்த மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கான Choice filling இன்று தொடங்கி, 31ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.




இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா, எந்தப் படிப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது?


இதுகுறித்துக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:


''இந்த ஆண்டு 3ஆவது கட்டக் கலந்தாய்வில் 50.42 சதவீத மாணவர்களுக்கு (24,727) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 55.65 சதவீதமாக இருந்தது. அதாவது 41,910 மாணவர்களில் 23,327 பேருக்கு இடம் உறுதி செய்யப்பட்டது. 


கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 3ஆம் கட்டக் கலந்தாய்வில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. தகுதிவாய்ந்த மாணவர்கள் ஏராளமானோர் இருந்தபோதும் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 


குறிப்பாக 3ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில், 94,620 தகுதிவாந்த மாணவர்களுக்கு இடையே  52,467  மாணவர்கள் (55.45%) மட்டுமே கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டில்,  62.52 % ஆக இருந்தது. மொத்தமுள்ள 1,39,251 இடங்களில் இன்னும் 86,784 இடங்கள் நிரப்பப்படவில்லை. இதுவரை 37.7 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 38.85 சதவீத இடங்களை மாணவர்கள் தேர்வு செய்திருந்தனர்.


4ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில், 62 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




பொறியியல் கல்லூரிகளின் செயல் திறன்


3 கட்டக் கலந்தாய்வின் முடிவில், 3 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் ஒரே ஒரு கல்லூரி மட்டுமே தனியார் கல்லூரி ஆகும். 


1. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி (Central Electro Chemical Research Institute - CECRI Karaikudi)
2. பிஎஸ்ஜி தொழில்நுட்ப நிறுவனம் (PSG Institute of Technology)
3. கட்டிடக் கலை பள்ளி, சென்னை (School of Architecture, Chennai)


33 கல்லூரிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் 17 கல்லூரிகள் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் ஆகும். 52 கல்லூரிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 114கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.


அதே நேரத்தில் 173 கல்லூரிகளால் 10 சதவீத இடங்களைக் கூட நிரப்ப முடியவில்லை. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட 7 அரசு நிறுவனங்களால், 50 சதவீத இடங்களைக் கூட நிரப்ப முடியவில்லை. 25 கல்லூரிகளில் இதுவரை ஒற்றை இடம் கூட நிரம்பவில்லை. 




எந்தப் படிப்புக்கு வரவேற்பு அதிகம்?


பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கணினி மற்றும் ஐடி தொடர்பான படிப்புகள் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. அதை அடுத்து, இசிஇ (ECE) பிரிவை அதிக மாணவர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். 


அதேபோல மெக்கானிக்கல், சிவில் படிப்புகளைப் பெரும்பாலான மாணவர்கள் எடுக்கவில்லை. 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஓசி பிரிவில் இன்னும் மெக்கானிக்கல் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஓசி பிரிவில் இன்னும் சிவில் இடங்கள் நிரம்பாமல் உள்ளன''.


இவ்வாறு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.