நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் , இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக முதல் அலையில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது. ஊரடங்கு, கடைகள் திறப்பிற்கு கட்டுப்பாடுகள், மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டு போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.


NEET (UG) 2021 Application: செப்.12ல் நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!


இந்நிலையில், புதுச்சேரியை போல் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும், முதலமைச்சர் சொல்லும் வழிகாட்டுதல் படி முடிவு எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.


 






இதேபோல், கல்லூரி திறப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லூரிகளில் திட்டமிட்டபடி மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரிகளை திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முதலமைச்சர் முடிவு செய்வார்” என்று கூறினார்.


முன்னதாக, புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. புதுச்சேரியில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து கல்வித்துறை மற்றும் கல்வி நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது.


புதுச்சேரியில் முதற்கட்டமாக மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதை தொடர்ந்து, கடந்த 1ஆம் தேதி முதல் ஜிப்மரில் மருத்துவ வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, அரியானா மாநில அரசு ஜூலை 16-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமான அனுமதி கட்டாயம் தேவை என்றும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.


மேலும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 23-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும், பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநில அரசும் வரும் 15-ந் தேதி முதல் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை திறக்க முடிவு செய்துள்ளது. 


''எங்கெங்கும் மக்கள் கூட்டம்.. இது ஆபத்து..'' மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ சங்கம்