ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் நடைபெற்ற ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளனர்.

Continues below advertisement


இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளதாவது:


''தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 1.81 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறைக் காலத்தில் வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக, 12 நாட்களுக்கு ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டி நடைபெற்றது. சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் 'கூகுள் ரீட் அலாங்க்' (Google read along)  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கைப்பேசி செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை மாணவர்கள் வாசித்து உள்ளனர். 


வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் இந்த நிகழ்வில் 18.36 லட்சம் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மாணவர்கள் 12 நாட்களில் 263.17 கோடி சொற்களைச் சரியாக வாசித்துச் சாதனை படைத்து உள்ளனர். இந்த நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மொத்தம் 9.82 லட்சம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்து உள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த சாதனையை செய்வதற்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மிகப்பெரிய ஊக்க சக்தியாக திகழ்ந்துள்ளனர்.




உலகலாவிய அளவில் கூகுள் ரீட் அலாங்க் செயலியை பயன்படுத்தியதில் தமிழக மாணவர்கள் உலக சாதனை புரிந்துள்ளார்கள். 413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 லட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றுள்ளது. அடுத்ததாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் (49.19 லட்சம்) மற்றும் மேலூர் வட்டாரம் (41.72 லட்சம்) ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு இந்த ரீடிங் மரத்தான் தொடர் வாசிப்பு நிகழ்வு உதவி புரிந்துள்ளது. இதில் பங்கேற்ற மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மற்றும் வாசிப்பு வேகம் ஆகியவை மேம்பட்டுள்ளது. பல நூறு கதைகள் வழியாக புதிய சொற்களை மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர். அலைபேசிகளை வாசிப்புப் பழக்கத்திற்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த இயலும் என்ற புதிய வாய்ப்பை இந்த ரீடிங் மாரத்தான் ஏற்படுத்தித் தந்துள்ளது''.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண