புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி மே 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஜூன் 6-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நிலவிய வரலாறு காணாத வெப்பம் நீங்கி தற்போது பல இடங்களிலும் கோடை கனமழை பெய்துள்ளது. பல மாவட்டங்களில் இதற்காக ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு மே ஒன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் 25ஆம் தேதி யிலிருந்து துவங்கியது.


புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஜூன் 12 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் அன்று, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். பள்ளிகள் திறந்தவுடன் பாடநூல், நோட்டு, சீருடை துணி மற்றும் தையல் கூலி வழங்கப்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.