புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த கல்வி ஆண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக உள்ளது. இதற்காக ஏப்ரல் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.


யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு என தனியாகக் கல்வி வாரியம் கிடையாது. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழகப் பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மாநிலம் முழுவதும் ஒரே கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 


இதையடுத்து 2011ஆம் ஆண்டில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு, புதுச்சேரி முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. பின்னர் 2014- 15ஆம் கல்வி ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 


5ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம்


அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் 2018- 19ஆம் கல்வி ஆண்டில் 5ஆம் வகுப்புக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும் அதற்குப் பிறகு பிற வகுப்புகளுக்கு பாடத் திட்டம் கொண்டு வரப்படவில்லை. 


6ஆம் வகுப்பில் இருந்து மாணவர்கள் தமிழகப் பாடத் திட்டத்திலும், ஆந்திர மற்றும் கேரள பாடத் திட்டங்களிலும் படித்து வந்தனர். இதையடுத்து பிளஸ் 2 வரை, ஒரே பாடத்திட்டமாக சிபிஎஸ்இ-ஐ அமல்படுத்த கடந்த 2022ஆம் ஆண்டு அரசு முடிவு செய்தது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.


10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தமிழக பாடத்திட்டம்


இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தமிழக பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. அதே நேரத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.


இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, அனைத்து வகுப்புகளுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக உள்ளது.


சிபிஎஸ்இ வாரிய விதிகளின்படி, அரசுப் பள்ளிகள் ஏப்ரல் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.


விடுமுறை எப்போது?


மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரையிலும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கிய பிறகு மே 1 முதல் 31ஆம் தேதி வரையிலும் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம்  வரை பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.