ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை பள்ளிக் கல்வித்துறை நீக்க வேண்டும் என்று எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில், ’முழுக்கள்’ என்ற தலைப்பிலான பாடம்  சீட்டுக்கட்டு உதாரணத்துடன் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் புள்ளியியலும் நிகழ் தகவும் என்ற தலைப்பின்கீழ் சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்கள் இடம்பெற்றிருந்தன. 


6ஆம் வகுப்பில் முழுக்கள் என்ற தலைப்பிலான கணிதப் பாடம், முழு எண்களைக் கொண்டு கூட்டல் மற்றும் கழித்தலை விளையாட்டு வடிவத்தில் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டது. இதில், எந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டுவது, எந்த எண்ணை கழிப்பது என்பதை சீட்டுக்கட்டுகள் மூலமாக கற்றுத் தர வேண்டியதில்லை என்று அரசியல் தலைவர்களும் ஆசிரியர்கள், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு பாடம் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை பள்ளிக் கல்வித்துறை நீக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் மூன்றாம் பருவத்தின் தொகுதி இரண்டாவது புத்தகத்தில் இயல் இரண்டில் முழுக்கள் எனும் தலைப்பில் ஆன பாடம் இடம்பெற்றுள்ளது.


சீட்டுக் கட்டு முறையை அறிமுகப்படுத்துவதா?


கணிதத்தில் முழுக்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் இருந்தும் சீட்டுக் கட்டு முறையை மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல.


தற்போது ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டங்களில் சீட்டுக் கட்டு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை அரசே தடை செய்திருந்தது. இத்தகைய சூழலில் மாணவர் பருவத்திலேயே சீட்டுக் கட்டு விளையாட்டு குறித்தும் அதன் விளையாட்டு உத்தி குறித்தும் விரிவாக பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்புடையது அல்ல.


நீக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பாடம் 


பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திலும் இது போன்ற பாடங்கள் இருந்தன. அதனை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நீக்கி கேள்வித் தாள்களிலும் அந்தப் பாடங்கள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொண்டது. இந்த பாடத்திட்டம் அதிமுக அரசு காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்றாலும் கூட திராவிட மாடல் ஆட்சியில் இதே பாடம் நீடிப்பது கொள்கைக்கு முரணானது. எனவே பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த பாடத்தை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’.


இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.