நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியது, அடுத்தடுத்த வரிசை எண்களைக் கொண்ட தேர்வர்கள் முதலிடம் பெற்றது, தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள்  நீட் தேர்வு முடிவுகளில் எழுந்து வருகின்றன.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நீட் குளறுபடி குறித்துக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து தேர்வை நடத்திய தேசியத் தேர்வுகள் முகமை நீண்ட விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை கூறி உள்ளதாவது:


''நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் இந்த முறை 323.55 ஆக உள்ளது. இது 2023-ல் 279 ஆகவும், 2022-ல் 259 ஆகவும் 2021-ல் 286 ஆகவும் 2020-ல் 297 ஆகவும் இருந்தது. பொதுப்பிரிவினர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறக் குறைந்தபட்ச மதிப்பெண் 164 ஆக இம்முறை உள்ளது. இது, 2022-ல் 117 ஆக இருந்தது.  


கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிப்பு


ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில், நீட் கட் - ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்திருப்பது, தேர்வு முறையின் கடினத் தன்மையையும் தேர்வர்களின் உயர் செயல்திறனையும் காட்டுகிறது.


நேர இழப்புக்குக் கருணை மதிப்பெண்கள் (Compensatory marks for loss of time)


2024ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வை எழுதிய மாணவர்கள் சிலரின் மனுக்கள், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. சில தேர்வு மையங்களில் தேர்வின்போது நேர இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதை ஈடுகட்டும் விதமாக, சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.


1,563 மாணவர்களுக்கு இவ்வாறு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்ணானது - 20ல் இருந்து 720 வரையானதாக இருந்தது. அதேபோல 2 தேர்வர்களுக்கு மட்டும்  718 மற்றும் 719 மதிப்பெண்கள் கிடைத்தன.  


நீட் தேர்வு டாப்பர்கள் (Toppers in NEET (UG) 2024)


2023ஆம் ஆண்டு நீட் தேர்வை எழுதியவர்கள் எண்ணிக்கை 20,38,596 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு 23,33,297 ஆக உயர்ந்துள்ளது. தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அதிக மதிப்பெண்கள் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.


முழு மதிப்பெண்கள் பெற்ற 67 தேர்வர்களில், 44 பேர், இயற்பியல் ஆன்சர் கீயில் திருத்தம் பெற்றவர்கள். 6 பேர் கருணை மதிப்பெண்களைப் பெற்றவர்கள். இதனால் அதிக அளவிலான மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 


மோசடி செய்தவர்களின் வழக்குகள் (Regarding Unfair Means cases)


ஏற்கனவே இருக்கும் என்டிஏ விதிமுறைகளின்படி, தேர்வர்கள் மோசடி, முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படும், வருங்கால என்டிஏ தேர்வுகளை அவரால் எழுத முடியாது. ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது சில வழக்குகள், மாநிலக் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வினாத்தாள் கசிவு தொடர்பான செய்திஅக்ளை நாங்கள் மறுக்கிறோம்.


தேர்வு முடிவுகள் வெளியான தேதி


ஏற்கனவே தேர்வு நடந்து, ஆன்சர் கீ வெளியாகி உரிய செயல்முறைகளுக்குப் பிறகே தேர்வு முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டன. நீட் தேர்வு நடத்தப்பட்டு 30 நாட்களுக்கு உள்ளாக, 23 லட்சம் பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன''.


இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது.


இதை வாசிக்கத் தவறாதீர்கள்: NEET UG Result 2024: நீட் தேர்வு முடிவில் குளறுபடி? வெளிச்சத்துக்கு வரும் முறைகேடுகள்? விளக்கம் அளிக்குமா என்டிஏ?