நீட் தேர்வுக்கு முன்பாக, வட மாநிலங்களில் வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடைபெற்றதாகக் கடும் சர்ச்சை எழுந்த நிலையில், பிஹார் காவல்துறையினர் 13 பேரைக் கைது செய்தனர். அந்த சர்ச்சை ஏற்பட்டு முடிவதற்குள், தற்போது தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வை எழுத 24,06,079 பேர் விண்ணப்பித்து, 23,33,297 பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இதில், மொத்தம் 13 லட்சத்து 16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% பேர் தேர்ச்சி அடைந்தனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும்.


வரலாற்றில் முதல்முறையாக 67 மாணவர்கள் முழு மதிப்பெண்


அதேபோல வரலாற்றில் முதல் முறையாக 67 மாணவர்கள், முழுமையான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 8 பேர் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.


இந்த நிலையில், தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என்று கூறுவதற்கு என்ன காரணங்கள்?


காரணம் 1


நீட் தேர்வில் முதலிடம் பெற்ற 6 தேர்வர்கள் மற்றும் அதற்கு அடுத்தடுத்த இடங்கள் பெற்ற இருவரின் பதிவு எண்கள் அடுத்தடுத்த வரிசை எண்களில் உள்ளது. இது சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது. 




காரணம் 2


நீட் போன்ற கடினமான நுழைவுத் தேர்வு குறித்து என்னதான் விழிப்புணர்வும் பயிற்சி பெறுவதும் அதிகரித்து இருந்தாலும் 67 பேரால் முழு மதிப்பெண்களைப் பெற முடியுமா?


காரணம் 3


நீட் தேர்வு எதிர்மறை மதிப்பெண்களைக் கொண்டது. ஒவ்வொரு கேள்விக்கு அளிக்கப்படும் சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த வகையில் 180 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தவறாக விடை அளிக்கப்படும் கேள்விக்கு 1 மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும். இதன் மூலம் 4 + 1  நெகட்டிவ் மதிப்பெண் என்ற வகையில்,  1 கேள்விக்கு தவறாக பதிலளித்தாலே 715 மதிப்பெண்களை மட்டுமே பெற முடியும். 1 கேள்விக்கு பதிலே அளிக்காத பட்சத்தில் 716 ம மதிப்பெண்களை மட்டுமே பெற முடியும். ஆனால் 718, 719 மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.


தேசியத் தேர்வுகள் முகமை விளக்கம்


இந்த நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்களில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதே, தேர்வர்களுக்கு 718, 719 என மதிப்பெண்கள் வந்ததற்காக காரணம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதுகுறித்து முகமை கூறும்போது, ’’உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 13.06.2018-ன் படி, கருணை மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தேர்வு மையத்தில் நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது குறித்து, மாணவர்கள் தேசியத் தேர்வுகள் முகமையிடம் முறையிட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் சிலருக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதனால் சிலரின் மதிப்பெண்கள் 718 அல்லது 719 என இருக்கலாம்’’ என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.




எனினும் கருணை மதிப்பெண்களுக்கு எப்போது, யாரெல்லாம் விண்ணப்பித்தனர் என்ற விவரங்கள் எதையும் தேசிய தேர்வு முகமை வெளியிடவில்லை.


யாருக்கு, எப்போது, எங்கே நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது?


இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகவில்லையே?


எத்தனை தேர்வர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன?


உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் எங்கே?


முழு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாதது ஏன்?


என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை.


அதிகரிக்கும் மர்மங்கள்


நாளுக்கு நாள் நீட் தேர்வு மர்மங்களுக்கான முடிச்சுகள் அவிழாமல், அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதற்கு தேசியத் தேர்வுகள் முகமைதான் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள், கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.