நீட் தேர்வை ஒழித்துக் கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:


’’சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.


வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.


மாநில அரசு முதன்மை பெற வேண்டியதன் அவசியம்


இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.


மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறோம்:


* நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.


* அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.


* சமூக நீதிக்கு எதிரானவை.


* தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.


நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோப்போம்! நீட்டை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அரசியல் தலைவர்கள் கோரிக்கை


முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். நீட் மதிப்பெண் குளறுபடிகள் வெளிவருவதாக எழும் மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பயனற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதை வாசிக்கத் தவறாதீர்கள்: NEET UG Result 2024: நீட் தேர்வு முடிவில் குளறுபடி? வெளிச்சத்துக்கு வரும் முறைகேடுகள்? விளக்கம் அளிக்குமா என்டிஏ?