மத்திய அரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, 16 மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக போராட்டத்தை அறிவித்துள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தற்போது ஒன்றாக இணைந்து, United Students of India என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.


நாட்டில் செயல்பட்டு வரும் 16 மாணவர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இதில் திமுக மாணவர் அணிச் செயலாளரும் எம்எல்ஏவுமான சிவிஎம்பி எழிலரசன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகளுடைய மாணவர் அமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக மயூக் பிஸ்வாஸ், அனுராக் நிகாம், பிரசெஞ்சித் குமார் உள்ளிட்ட பிற கட்சிகளின் மாணவரணித் தலைவர்களும் உடன் இருந்தனர்.


‘கல்வியைக் காப்பாற்ற தேசிய கல்விக் கொள்கையை நிராகரியுங்கள்; இந்தியாவைக் காப்பாற்ற, பாஜகவை நிராகரியுங்கள்’ (Save Education, Reject NEP; Save India, Reject BJP) என்ற முழக்கத்துடன் கூட்டம் நடைபெற்றது.


செய்தியாளர்கள் சந்திப்பில் மாணவர் தலைவர்கள் கூறியதாவது:


மாணவர்களை அணிதிரட்டுவோம்


’’எங்களின் அமைப்பில் சுமார் 5 கோடி மாணவர்கள் உள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்ட உள்ளோம். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதன் மூலம், மாணவர்களின் எதிர்காலத்துடன் பாஜக விளையாடுகிறது.


மிகப்பெரிய பயிற்சி மையங்களுக்கு உதவவே க்யூட் தேர்வு உள்ளிட்ட பொது நுழைவுத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன. தேசிய கல்விக் கொள்கை, கல்வியை வணிகமயமாக்கி, வகுப்புவாதமாக்குகிறது.


கல்வி இல்லையென்றால் ஜனநாயகம் வலுவிழக்கும். ஜனநாயகம் வலுவிழந்தால் நமது சுதந்திரம் வலுவிழக்கும் என்ற காரணத்தால் கல்வி உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தோடு; கல்வியை வணிகமயமாக்கும், காவிமயமாக்கும், அனைவருக்குமான சமவாய்ப்பை மறுக்கும், குலக்கல்வித் திட்டத்திற்கு வழிவகுக்கும், இருமொழிக் கல்வி கொள்கையை இருட்டடிப்பு செய்யும்,சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி, இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றைப் பண்பாட்டு தேசமாக அதிலும் குறிப்பாக சமஸ்கிருத பண்பாட்டுத் தேசமாக இந்தியாவை கட்டமைக்க வழிவகுக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிராகரிப்போம்!


பிப்ரவரி 1-ல் சென்னையில் பேரணி


இந்தியாவை காக்க Save Education, Reject NEP; Save India, Reject BJP என்ற முழக்கத்துடன், டெல்லியில் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணியை (Parliament March) வரும் 2024, ஜனவரி 12 தேதியன்றும், அதே கருத்தை பரப்புரை செய்யும் வகையில் சென்னையில் 2024, பிப்ரவரி 1-ம் தேதியன்றும் மாபெரும் பேரணியை நடத்திடவும் “United Students of India” கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது’’.


இவ்வாறு இந்திய ஐக்கிய மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.