பள்ளி மாணவர்களைப் பார்க்கும்போது என் இளமை திரும்புவது போன்று, எனர்ஜி கிடைக்கிறது என பள்ளிக் கல்வித்துறையின் ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐம்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில், 2023-2024 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கி, 67ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று  (14.06.2024) இந்த விழா நடைபெறுகிறது.  


இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’பள்ளி மாணவர்களைப் பார்க்கும்போது என் இளமை திரும்புவது போன்று, எனர்ஜி கிடைக்கிறது. அரசியல் நிகழ்வுகளைப் போல, பள்ளிக் கல்வித்துறை சார்பிலும் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.


தமிழ்நாட்டிலுள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட்‌ வகுப்பறைகள்‌ உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள்‌ மனதிற்குப்‌ பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட்‌ போர்டு ஒன்றைப்‌ பொருத்தப்‌ போகிறோம்‌. இங்கு இணையதள வசதியும்‌ இருக்கும்‌.


முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட்‌ வகுப்பறைகளை இன்றைக்கு துவக்கி வைத்திருக்கிறேன்‌. இது எல்லாமே உங்களுக்காகத்தான்‌. என்னுடைய ஆசையெல்லாம்‌, உலகத்தில்‌ எந்த ஊர்‌ மாணவர்களுக்கும்‌, என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள்‌ சவால்‌ விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும்‌. அதுதான்‌ என்‌ கனவு. அதற்காகதான்‌ இந்தத்‌ துறையில்‌ நிறைய திட்டங்களைக்‌ கொண்டு வருகிறோம்‌.


நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும்‌, கல்வித்துறையில்‌ நிறைய புதுப்புதுத்‌ திட்டங்களை தொடங்குகிறோம்‌ என்றால்‌, உங்களுக்காகத்தான்‌. மறற எல்லாவற்றையும்‌ நான்‌ பார்த்துக்கொள்கிறேன்‌. பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான்‌கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்‌... படியுங்கள்‌.. படியுங்கள்‌.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும்‌.


 


எங்கும்‌ தேங்கி நிற்காமல்‌, முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்‌. உங்கள்‌ கண்முன்னால்‌“புல்‌ ஸ்டாப்‌” தெரியக்‌ கூடாது. 'கமா' தான்‌ தெரியவேண்டும்‌. கீப்‌ ரன்னிங்‌. கீப்‌ வின்னிங்‌. கீப்‌ ஷைனிங்‌.


கல்விதான்‌ உங்களிடமிருந்து யாராலும்‌ திருட முடியாத ஒரே சொத்து. ஆனால்‌, அதிலும்‌ கூட, மோசடிகள்‌ செய்வதை “நீட்‌” போன்ற தேர்வு முறைகளில்‌ பார்க்கிறோம்‌. அதனாலதான்‌ அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம்‌. “நீட்‌” போன்ற தேர்வுகள்‌ மோசடியானவை என்று முதன்முதலில்‌ கூறியது தமிழ்நாடுதான்‌. அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத்‌ தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம்‌ ஒரு நாள்‌ முடிவுகட்டுவோம்‌. அது எங்கள்‌ பொறுப்பு. மாணவச்‌ செலவங்களான நீங்கள்‌ படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல்‌ சூழநிலையோ எதுவுமே தடையாக இருக்கக்‌கூடாது.


கல்வி எனும்‌ நீரோடை தடங்கல்‌ இல்லாமல்‌ பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்‌! அதை நீங்கள்‌ முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌. எந்த கவனச்‌ சிதறலும்‌ இல்லாமல் படிக்கவேண்டும்‌. "படிக்காமலும்‌ பெரிய ஆள்‌ ஆகலாம்‌" என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப்‌ பார்த்து தவறான பாதையில்‌ செல்லாமல்‌, கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம்‌ என்று புரிந்துகொள்ள வேண்டும்‌.


கல்வி இருந்தால்‌ மற்ற எல்லாம்‌ தானாக வரும்‌. நீங்கள்‌ எல்லோரும்‌ உலகை வெல்லும்‌ ஆற்றலைப்‌ பெற்று, பகுத்தறிவோடு செயல்பட தமிழ்நாட்டின்‌ முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களின்‌ குடும்பத்தில்‌ ஒருவனாக இருந்தும்‌ வாழ்த்துகிறேன்’’


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.