அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் என மொத்தம் மாநிலம் முழுவதும் 59,152 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 2,631 பள்ளிகள் (4% பள்ளிகள்) ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருவதாக யுனஸ்கோ அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

சர்வதேச ஆசரியர் தினத்தை முன்னிட்டு, யுனஸ்கோ அமைப்பு '2021 State of the Education Report for India: No Teacher, No Class' என்ற அறிக்கையை வெளியிட்டது.  இதில், நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒற்றை ஆசிரியருடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணாக்கர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த புதிய ஆசிரியர்கள் உரிய நேரத்தில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப் பட வேண்டும் என்ற கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகள் தெரிவிக்கின்றன.  மாணவர் ஆசரியர் விகிதம் தொடக்க நிலையில் 30 ஆகவும், நடுநிலையில் 35 ஆகவும் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2019-20 ஆண்டு Unified District Information System For Education (UDISE) தரவுகளின் படி, தேசிய அளவில் தொடக்க நிலையில்  மாணவர் ஆசரியர் விகிதம் 27 ஆகவும், நடுநிலையில் 17 ஆகவும், உயர்நிலையில் 19 ஆகவும், மேல்நிலையில் 24 ஆகவும் உள்ளது. இதில், சில மாநிலங்களில்  மாணவர் ஆசரியர் விகிதம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


 

மறுபுறம்,ஆந்திரா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் செயல்படும் 30%க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மாணவர்- ஆசிரியர் விகிதம் கடைபிடிக்கப்பட வில்லை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 9% அரசுப் பள்ளிகளில் மாணவர்- ஆசிரியர் விகிதம் இடைவெளி அதிகமாக உள்ளது. அதே சமயம், 18.1% அரசு உதவி பெறும் பள்ளிகளில்  மாணவர்- ஆசிரியர் விகிதம் மோசமான நிலையில் உள்ளது. 

ஆசிரியர் பற்றாக்குறை?                                        

  அனுமதிக்கப்பட்ட மனித திறன் நியமிக்கப்பட்ட ஆசரியர்கள்  காலியிடங்கள் 
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 147913 145551 2362
உயர்க்கல்வி ஆசரியர்கள்  45039 44643 396
மேல்நிலைக் கல்வி ஆசிரியர்கள் 27762 27222 540

 

தமிழ்நாட்டைப்  பொறுத்த வரையில், அனுமதிக்கப்பட்ட மனித திறனில், பெரும்பாலான பணிகள் நிரப்பப்பட்டுள்ளன. உதாரணமாக, தொடக்கக் கல்வியில் வெறும் 2362 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இது, மற்ற மாநிலங்களை விட குறைவாக எண்ணிக்கையாகும். பீகார் மாநிலத்தில் 223488 ஆசிரியர்கள் நிரப்பப்படவில்லை. ஆரம்பக்கல்வியில் சிறந்து விளங்கும், டெல்லி ஒன்றிய பிரதேசத்தில் கூட இந்த எண்ணிக்கை 4288 ஆக உள்ளது. 

எனவே, தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை சமச்சீராக இருந்தாலும், யுனஸ்கோ அறிக்கை சுட்டிக் காட்டுவது போல் 2,631 பள்ளிகளில் தேவைக்கும் குறைவான ஆசரியர்கள் பணி செய்து வருகின்றனர். எனவே, அந்ததந்த பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை ஒதுக்கும் பணியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை கவனம் செலுத்துவது இன்றியமையாததாகிறது.            

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண