அரசுப் பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:


''வட கிழக்குப் பருவ மழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மழைக் கால விபத்துகள், பாதிப்புகளை  தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை!






மழைக்கால பாதுகாப்பு பணிகள், பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்படி  ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி, நடப்பாண்டில் இதுவரை வழங்கப்படவில்லை!


சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்தப் பணத்தைக் கொண்டு இந்த பணிகளை செய்கிறார்கள். அவ்வாறு செய்யப்படாத பள்ளிகளில் மழைக் காலத்தில் ஏதேனும் விபத்துகள் நடந்தால்  ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆபத்துகள் ஏற்படக்கூடும். அது தவிர்க்கப்பட வேண்டும்!









 


பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் அலட்சியம் கூடாது


மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் பள்ளிக் கல்வித்துறை அலட்சியம் காட்டக் கூடாது.  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்படி  அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை பள்ளிக் கல்வித்துறை  உடனடியாக விடுவிக்க வேண்டும்''.


இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: Online PhD: ஆன்லைன் பிஹெச்.டி செல்லாது; மாணவர்கள் ஏமாற வேண்டாம் - யுஜிசி எச்சரிக்கை.. https://tamil.abplive.com/education/ugc-warns-students-against-taking-admission-to-online-phd-programmes-by-edtech-companies-81470/amp