ஆன்லைனில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் பிஎச்டி பட்டம் செல்லாது என்றும் போலி விளம்பரங்களை நம்பி மாணவர்களும் பொது மக்களும் ஏமாற வேண்டாம் எனவும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுகுறித்து உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் யுஜிசி எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’மாணவர்களுக்கு பிஎச்டி பட்டங்களை வழங்குவதில் தரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதற்காக யுஜிசி விதிமுறைகள் 2016 முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். எனினும் சில கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் (EdTech Companies) சர்வதேசக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் பிஎச்டி படிப்புகளை வழங்கி வருகின்றன. எனினும் இவை செல்லாது. இதுகுறித்துப் பொது மக்களும் மாணவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றியே, இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் பிஎச்டி படிப்புகளையும் பட்டத்தையும் வழங்க வேண்டும்’’. 


இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.


முன்னதாக பிஎச்.டி. படிப்புக்கான புதிய தகுதிகள் குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டது. அதில் முதுகலை படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்யவும், பிஎச்.டி. படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கவும் யுஜிசி முடிவெடுத்து, அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல வேறு சில அம்சங்களையும் அறிமுகம் செய்தது.


* டிகிரியை வழங்கும் ஒவ்வொரு தன்னாட்சிக் கல்லூரியும் பிற கல்லூரிகளும் பிஎச்.டி. படிப்புகளை வழங்கலாம்.


* 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்பை முடித்து ஓராண்டு / இரண்டு செமஸ்டர்கள் முதுகலைப் படிப்பை முடித்தவர்கள் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் அவர்கள் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 


* இளங்கலைப் படிப்பை முடித்து 2 ஆண்டுகள்/ 4 செமஸ்டர்கள் கொண்ட முதுகலைப் படிப்பை முடித்தவர்களும் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 


* ஆராய்ச்சியுடன் கூடிய 4 ஆண்டுகள் / 8 செமஸ்டர்கள் கொண்ட இளங்கலைப் படிப்பை முடித்தவர்களும் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் 10-க்குக் குறைந்தது 7.5 சிஜிபிஏவைக் கொண்டிருக்க வேண்டும். 


* இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி நான் க்ரீமி லேயர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் 5 சதவீதம் தளர்வு உண்டு. அதாவது மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது. 




* 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்பை முடித்து, பிஎச்.டி. படிக்க விரும்பும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி நான் க்ரீமி லேயர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் 0.5 சிஜிபிஏ தளர்வு உண்டு. அதாவது மேற்குறிப்பிட்டவர்கள் 10-க்குக் குறைந்தது 7.0 சிஜிபிஏவைக் கொண்டிருக்க வேண்டும். 


பிஎச்.டி. படிப்புக்கு நுழைவுத் தேர்வு


* அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேசிய தகுதித் தேர்வு (NET) அல்லது தேசிய நுழைவுத் தேர்வு அல்லது பல்கலைக்கழகங்களே நடத்தும் நுழைவுத் தேர்வின் மூலம் பிஎச்.டி. ஸ்காலர்களை அனுமதிக்க வேண்டும். 


* இதில் 60 சதவீத காலி இடங்கள் நெட் / ஜேஆர்எஃப் நுழைவுத் தேர்வு மூலமும் 40 சதவீத காலி இடங்கள் பல்கலைக்கழகத் தேர்வுகள் மூலமும் நிரப்பப்படும். 


* பிஎச்.டி. படிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தங்களுக்கான இடங்களின் எண்ணிக்கையில் ஸ்காலர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.


* ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள், கல்வி, ஆராய்ச்சி வசதிகள், ஆய்வகம், நூலகம் மற்றும் பிற வசதிகள் ஆகியவற்றைக் கொண்டு பிஎச்.டி. படிப்புக்கான இடங்கள் முடிவு செய்யப்படும். 


* நுழைவுத் தேர்வு கேள்விகள் ஆராய்ச்சி/ பகுத்தறியும் திறன்/ புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறக் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில் எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி நான் க்ரீமி லேயர் வகுப்பினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் 5 சதவீத விலக்கு உண்டு.


இவ்வாறு யுஜிசி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.