மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கடந்த ஜுலை மாதத்திற்குரிய சம்பள பாக்கி 2,500 ரூபாயை விரைவாக வழங்க வேண்டும் என அரசுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 


தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 


LIVE | Kerala Lottery Result Today (09.08.2024): நிர்மல் NR-392 வெள்ளிக்கிழமை: முடிவுகள் 3 மணிக்கு..


ஊதியம் இல்லாத மே மாதம் 


கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 12 ஆண்டுகள் முடிந்த பின்னும்கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.




தாமதம் ஆகும் ஊதிய உயர்வு 


இந்நிலையில் கடந்த ஆண்டு 2023 ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். இதனை அடுத்து நடப்பு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூபாய் 2500 சம்பளம் உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது. ஆனாலும் 10 ஆயிரம் ரூபாய் SNA கணக்கிலும், 2500 ரூபாய் ECS முறையிலும் தனித்தனி பரிவர்த்தனையாகவே பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக இந்த 12500 ரூபாய் சம்பளத்தை ஒரே பரிவர்த்தனையில் இதுவரை பட்டுவாடா செய்யப்படாததால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஜூன், மதங்களின் சம்பளம் தாமதமாகவே வழங்கப்பட்டது. இதனால் 12,500 ரூபாய் சம்பளத்தை ஒரே பரிவர்த்தனையாக வழங்க வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.




இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் சம்பளமாக இதுவரை 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே SNA கணக்கு மூலமாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ECS மூலமாக வழங்கும் அந்த 2,500 ரூபாய் மாதம் பிறந்து 10 நாட்கள் கடந்தும் இதுநாள் வரை மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பட்டுவாடா செய்யவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.




தேர்தல் வாக்குறுதியை நடைமுறை படுத்த கோரிக்கை 


இது குறித்து செந்தில்குமார் கூறியதாவது, 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு, சம்பள உயர்வாக 2500 ரூபாய் இந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 10 ஆயிரம் தனியாகவும், 2500 தனியாகவும் இரண்டு பரிவர்த்தனையாக வழங்கப்படுகிறது. இதில் இந்த ஏப்ரல் மாதம் இதுவரை 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2500 ரூபாய் இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும்.




இனி மொத்தமாகவே 12,500 ரூபாய் சம்பளத்தையும் ஒரே பரிவர்த்தனையில் வழங்க வேண்டும். அதுபோல் கல்வித்துறை அமைச்சர் கூறிய மருத்துவ காப்பீடு 10 லட்சம் ஆணையை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும். உடல்நிலை கோளாறு, விபத்து உள்ளிட்ட காரணங்களால் மரணிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த மருத்துவ காப்பீடு கிடைத்தால் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல மே மாதம் சம்பளம் இல்லாமையால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களும் பரிதவிக்கின்றோம்.





கருணை தொகையாக நடப்பு மே மாதம் சம்பளம் வழங்கி பகுதிநேர ஆசிரியர்களுக்கு உதவிட வேண்டும். திமுக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி 181 ன்படி பணி நிரந்தரம் செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியலை தர வேண்டும். பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் ஒழியும். பணி நிரந்தரம் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழுமையாக தீர்வு அளிக்கும் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.