மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் அவரது நியமனம் செல்லாது. என அறிவிக்க கோரிய வழக்கு..

 

கல்லூரி கல்வி இயக்குநர், யூஜிசி உள்ளிட்டோர்  பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 

 

மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்த டேவிட் ஜெரால்டு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர். கணிதத்துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு, உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2011ல் முதல்வர் மற்றும் செயலர் பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. 

 

கண்துடைப்பாக நடந்த தேர்வு நடைமுறைகளின்படி முதல்வரானார். இவருக்கு வழங்கிய பிஎச்டி ஆராய்ச்சி பட்டத்தை அழகப்பா பல்கலைக் கழகம் கடந்த 2014ல் திரும்ப பெற்றது. பின்னர், கல்வியியல்-கணிதத்தில் பிஎச்டி பட்டம் வழங்கியது. இதன்படி, அவர் கல்வியியல் கல்லூரியில் தான் முதல்வராக முடியும். யூஜிசி விதிப்படி அவரால் அமெரிக்கன் கல்லூரியில் முதல்வராகும் தகுதியை இழந்து விட்டார். 

 

இது தொடர்பான ஒரு வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவை பெற்று, பல ஆண்டுகாளாக தொடர்ந்து முதல்வராக நீடிக்கிறார். எனவே, அவரது நியமனம் செல்லாது என்றும், அவர் முதல்வராக தொடர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் மனுவிற்கு கல்லூரி கல்வி இயக்குநர், யூஜிசி உள்ளிட்டோருக்கு  பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இது தொடர்பான ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து பட்டியலிடக் கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.