எல்கேஜி, யூகேஜி மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையைத் தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:    


’’தமிழ்நாட்டில் 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. இதனால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ள நிலையில்,  இந்த முக்கியமான விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை அலட்சியம் காட்டுவது மிகவும் கவலையளிக்கிறது.


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2,381 அரசு பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  எல்.கே.ஜி, யூ.கே.ஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை அறிவித்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மழலையர் வகுப்புகள்  அரசுப் பள்ளிகளுக்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். 


2,500 சிறப்பாசிரியர்கள்


ஆனால், அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதற்காக 2,500 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் கடந்த 9ஆம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்தார்.




ஆனால், அதன்பின் 19 நாட்களாகி விட்ட நிலையில், 2,381 அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட  எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு இன்னும் மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13ஆம் தேதி அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் இரு வாரங்களாகியும் மழலையர் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகள் நடத்தப்படாத நிலையில் நடப்பாண்டில் மழலையர் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க, பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளுக்குப் படையெடுக்கின்றனர். ஆனால், மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அவர்களுக்கு எந்த விளக்கமும் கிடைப்பதில்லை. மாறாக, ‘‘இரு வாரங்கள் கழித்து வாருங்கள்’’ என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது.


பெற்றோர்கள் குழப்பம்


ஆங்கில மயமாக்கப்பட்ட கல்விச் சூழலில் தங்கள் பிள்ளைகள் மழலையர் வகுப்புகளில் பயில வேண்டும்  என்பது பெற்றோர்களின் கனவாக உள்ளது. ஆனால், அனைத்துப் பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகளைத் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகள்தான் வரப்பிரசாதமாக அமைந்திருந்தன. தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து வகுப்புகளும் தொடங்கி விட்டன. ஆனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பது கூட தெரியாததால் பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர்.


அதேபோல், மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளும் இன்னும்  தொடங்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகுதான் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை மழலையர்களின் கல்வி உரிமை பறிக்கப்படக்கூடாது. ஏற்கனவே, மழலையர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களைக் கொண்டு  மழலையர் வகுப்புகளை நடத்துவதற்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.


அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  அதனால் அந்தப் பருவத்தில் அவர்களுக்கு முறைசார்ந்த கல்வி வழங்குவது அவசியம் ஆகும். இதை உணர்ந்து அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை  தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஒரு வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளைத் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.