ஒருவர் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் சிஏபிஎஃப் அறிவிப்பு அமைந்துள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் சிஏபிஎஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


சிஆர்பிஎஃப் தேர்வு அறிவிப்பு


ஜூன் மாதம் நடைபெற உள்ள சிஆர்பிஎஃப் தேர்வில் மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.









இந்த நிலையில் சிஏபிஎஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நடைமுறை 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் இளைஞர்கள் பயன்பெறுவர்


தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மாநில மொழிகளில் தேர்வு நடைபெறுவதால், அனைத்து இளைஞர்களின் தங்களின் தாய் மொழியிலேயே தேர்வு எழுத முடியும். இதன்மூலம் லட்சக்கணக்கான உள்ளூர் இளைஞர்கள் பயன்பெறுவர். இதுகுறித்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உரிய வழிகாட்டல்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதற்காக மத்திய உள்துறை அமைச்சகமும் அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. 


தமிழிலேயே அனைத்துத் தேர்வுகள்


இதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய அரசின் அனைத்துத் தேர்வுகளுக்கும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவேண்டும்  என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


பிரதமர் மோடி வாழ்த்து


ஒருவர் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் சிஏபிஎஃப் அறிவிப்பு அமைந்துள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’நமது இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகுகளை கொடுக்கும் முன்னுதாரண முடிவு இது! ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான, எங்கள் பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.