ஆய்வுப் பணியில் அதிகாரிகளுக்கு பதில் மாணவர்களை ஈடுபடுத்துவதா? கற்றல் என்னாவது? அன்புமணி கேள்வி
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆய்வுப் பணியில் அதிகாரிகளுக்கு பதில் மாணவர்களை ஈடுபடுத்துவதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், அவர்களின் கல்வி என்னாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாடு முழுவதும் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இயலாமையை மறைப்பதற்காக மாணவ, மாணவியரின் பாதுகாப்பை பலி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியா முழுவதும் வேளாண் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவும், நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன் நிலங்களை டிஜிட்டல் முறையில் சர்வே செய்வதற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதற்காக அக்ரிஸ்டாக் என்ற அறக்கட்டளையை உருவாக்கி உள்ள மத்திய அரசு அதன் வாயிலாக இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளை கோரியுள்ளது.
மாணவர்களைக் கொண்டு நடத்துவதா?
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 6ஆம் தேதி தமிழகத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 48 கிராமங்களில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் பயிர் சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 22 நாட்கள் நீடிக்கும் முதன்மை சர்வேயை தொடங்கி நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க தமிழக அரசின் வேளாண்துறை ஆணையிட்டிருக்கிறது.
நிலத்தின் தன்மை, வளம், உரிமையாளர் விவரங்கள், கடன், காப்பீடு உள்ளிட்ட விவரங்களை டிஜிட்டல் மயமாக்குவது பயனுள்ள நடவடிக்கைகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இதை வேளாண்மை கல்லூரி மாணவர்களைக் கொண்டு மேற்கொள்வது தவறானது; இதை ஒருபோதும் அரசு அனுமதிக்கக் கூடாது. மொத்தம் 61 கோடி ஏக்கர் பரப்பளவிலான இப்பணிகளை மாணவர்களைக் கொண்டு முடிப்பது எளிதல்ல.
எதற்காகத் தவிர்க்கப்பட வேண்டும்?
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளை மாணவர்களைக் கொண்டு மேற்கொள்வது இரு காரணங்களுக்காக தவிர்க்கப்பட வேண்டியதாகும். முதலில் மாணவர்களின் பாதுகாப்பு. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்கள் பயிலும் கல்லூரிகளில் இருந்து 60 முதல் 70 கி.மீ தொலைவில் உள்ள கிராமங்களில் பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். அந்த கிராமங்களில் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை.
செப்பனிடப்படாத பகுதிகளில் பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பாதுகாப்பற்ற தனித்த பகுதிகளில் பணியாற்றும் போது மாணவ, மாணவியருக்கு சமூக விரோதிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்குமா?
அடுத்ததாக சர்வேயின் துல்லியத் தன்மை. அனைத்து மாணவர்களும் ‘கிராப் சர்வே’ என்ற செயலியை பயன்படுத்திதான் விவரங்களை சேகரிக்கின்றனர். ஆனால், செயலிகளை கையாளுவதற்கான எந்தவித பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. சோதனை சர்வேயின்போதே பல இடங்களில் செயலிகள் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் மாணவர்கள் தவறுதலாக தவறான விவரங்களை உள்ளீடு செய்துள்ளனர்.
அந்த விவரங்களை மாணவர்கள் நிலையிலோ, மாவட்ட இணை இயக்குனர் நிலையிலோ கூட திருத்த இயலாது. சென்னையில் தலைமை அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளால் மட்டும்தான் தவறுகளை திருத்த முடியும். ஒருவேளை மாணவர்கள் அவர்களையும் அறியாமல் தவறான விவரங்களை பதிவிட்டாலோ, அது குறித்த விவரங்களை உயரதிகாரிகளிடம் தெரிவிக்க மறந்தாலோ அந்த விவரங்கள் தவறாகவே பதிவாகிவிடும். அதைக் கண்டுபிடித்து திருத்துவது எளிதானதல்ல. அதனால், இந்த சர்வே மேற்கொள்ளப்படும் நோக்கமே முற்றிலுமாக சிதைந்துவிடக்கூடும்.
அதுமட்டுமின்றி, வேளாண் கல்லூரிகளின் மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்
அதற்கான அவர்களின் தேர்வுகளும், கல்விச் சுற்றுலாவும் ஒத்திவைக்கப்படுள்ளது. இப்பணிகள் முடிவடைந்த பிறகு தேர்வுகள், கல்விச் சுற்றுலா, பாடங்கள் ஆகியவற்றை நடத்துவது சாத்தியமற்றது. அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இன்னொருபுறம் ஒவ்வொரு வட்டத்திலும் பணியாற்றும் வேளாண்துறை அதிகாரிகளும் இந்த சர்வேயை ஆய்வு செய்யச் செல்ல வேண்டும் என்பதால் அவர்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படும்; உழவர்களும் பாதிக்கப்படுவர். அவற்றுக்கு அரசு பொறுப்பேற்குமா? இந்தப் பணிக்காக மாணவர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட எந்த வசதியும் வழங்கப்படுவதில்லை. அதனால், மாணவர்கள் சொந்தக் காசை செலவழிக்க வேண்டியுள்ளது. அரசுக்காக செலவு செய்வது அவர்களின் தலையெழுத்தா?
இவை அனைத்துக்கும் மேலான ‘டிஜிட்டல் பயிர் சர்வே’ மேற்கொள்ள வேண்டியது வேளாண்துறையின் பணி அல்ல. வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் மேற்பார்வையில் வருவாய்த்துறை தான் இதை செய்ய வேண்டும். அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பைக் கூட ஏற்படுத்தித் தராமல், இந்த பணிகளை மேற்கொள்ளும்படி கிராம நிர்வாக அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ஆனால், அடிப்படை வசதிகளும், ஊக்கத்தொகையும் இல்லாமல் இந்தப் பணியை செய்ய முடியாது என்று கூறிவிட்டதால், இந்த சுமை முழுவதும் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகள் அனைத்தும் அதிகாரிகள் நிலையில் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?
அரசு நிதியை என்ன செய்யப்போகிறது?
டிஜிட்டல் பயிர் சர்வே திட்டத்திற்கு ரூ.2817 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மட்டும் ரூ.1940 கோடியை வழங்குகிறது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவே இப்பணியை தமிழகத்தில் எளிதாக செய்ய முடியும். அதை விடுத்து மாணவர்கள் மூலம் இந்தப் பணியை செலவின்றி செய்யத் துடிக்கும் அரசு, அதற்கான நிதியை என்ன செய்யப்போகிறது?
கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு டிஜிட்டல் பயிர் சர்வே பணியை வேறு அமைப்புகள் மூலம் தமிழக அரசு செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.