சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் பணிக்கான 2023ஆம் ஆண்டு இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், இறுதித் தேர்வில் ஜெய்ப்பூர் மாணவர் மதூர் ஜெயின் 77.38 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் 800 மதிப்பெண்களுக்கு 619 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.


இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளர் படிப்புப் படிக்க விரும்புவர்கள், ஐசிஏஐ எனப்படும் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது அவசியம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.


இந்தத் தகுதித் தேர்வு, மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் இந்தத் தேர்வு நடக்கிறது.


தேர்வு எப்போது?


இதற்கிடையில், சிஏ தேர்வுகள் ஆண்டுதோறும் ஜூன் மாதம், நவம்பர் மாதம் என இரண்டு அமர்வுகளில் நடைபெறுகின்றன. இந்நிலையில் 2023-ம் ஆண்டு நவம்பர் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது. குறிப்பாக டிசம்பர் 24, 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்றது.


இடைநிலைத் தேர்வுகள், குரூப் 1 பிரிவினருக்கு நவம்பர் 2, 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 பிரிவினருக்கு நவம்பர் 10, 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன. அதேபோல நவம்பர் மாத அமர்வுக்கான சிஏ இறுதித் தேர்வும் இரு வகையாக நடைபெற்றது. குறிப்பாக குரூப் 1 பிரிவினருக்கு நவம்பர் 1, 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 பிரிவினருக்கு நவம்பர் 9, 11, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன.


மதூர் ஜெயின்


சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் பணிக்கான 2023ஆம் ஆண்டு இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், இறுதித் தேர்வில் ஜெய்ப்பூர் மாணவர் மதூர் ஜெயின் 77.38 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் 800 மதிப்பெண்களுக்கு 619 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.


22 வயதான மதூர் ஜெயின், இறுதியாண்டு படிப்பை ஆன்லைன் மூலம் படித்துள்ளார். கடின உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி ஆகியவையே தனது வெற்றிக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். 


இவரின் சகோதரர் 2020ஆம் ஆண்டு சிஏ தேர்வில் அகில இந்திய அளவில், 6வது இடம் பிடித்தது தனக்கு ஊக்கமளித்ததாகத் தெரிவித்துள்ளார்.  


அவருக்கு அடுத்தப்படியாக மும்பையைச் சேர்ந்த சன்ஸ்க்ருதி அதுல் பரோலியா என்னும் மும்பை மாணவர், 74.88 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இவர் 800-க்கு 599 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். திகேந்திர குமார் சிங்கால் மற்றும் ரிஷி மல்ஹோத்ரா ஆகிய இரு மாணவர்களும் 73.75 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர். இவர்கள் 590 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


இடைநிலைத் தேர்வுகளில் யார் முதலிடம்?


சிஏ இடைநிலைத் தேர்வில், மும்பையைச் சேர்ந்த ஜெய் தேவங் ஜிமுலியா என்ற மாணவர், 86.38 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த பகேரியா தனய் 86% மதிப்பெண்களும் சூரத்தைச் சேர்ந்த ரிஷி ஹிமான்ஷுகுமார் மேவாவாலா 83.50% மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.