சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ நாளை முதல்‌ அரையாண்டுத்‌ தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால்‌ பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ தவிர அனைத்து மாவட்டங்களிலும்‌ திட்டமிட்டபடி அரையாண்டுத்‌
தேர்வு நடைபெறும்‌ என்றும் இந்த 4 மாவட்டங்களில்‌ மட்டும்‌ நிலைமை சீரானவுடன்‌ அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம்‌ அளித்து தனித்தனியாக வினாத்தாள்‌ தயாரித்து அரையாண்டுத்‌ தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி தெரிவித்தார்.


இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


புதிய தேதிகள் அறிவிப்பு


இதுகுறித்து வெளியிடப்பட்ட திருத்திய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


’’தொடர்‌ மழையின்‌ காரணமாக, அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத்‌ தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில்‌ 11.12.2023 முதல்‌ குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில்‌ அதே பாடத்திற்கான தேர்வுகள்‌ நடைபெறும்‌ எனவும்‌, 07.12.23 மற்றும்‌ 08.12.23 ஆகிய தேதிகளில்‌ நடைபெற இருந்த தேர்வுகள்‌ மட்டும்‌ 14.12.23 மற்றும்‌ 20.12.23 ஆகிய தேதிகளில்‌ முறையே நடைபெறும்‌ எனவும்‌ அறிவிக்கப்படுகிறது.


வினாத்தாட்கள்‌ தயாரிக்கும்‌ சிரமங்கள்‌


இதன்‌ மூலம்‌ சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்‌ பள்ளி அளவில்‌ வினாத் தாள்கள்‌ தயாரிக்கும்‌ சிரமங்கள்‌ தவிர்க்கப்படும்‌’’ என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.